3 மாதங்களில் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிக்கு ஆபத்து! கோவை உள்ளிட்ட 2ம் கட்ட நகரங்களுக்கு குறி
மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறாத ஐடி நிறுவன ஊழியர்கள் 2 லட்சம் பேர் பணியிழக்க நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : அடுத்த 3 மாதங்களில் 2 லட்சம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முன்னணி ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக முன்னணி நிறுகூன ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்க விசா பிரச்சனை, தள்ளாடும் ரூபாய் மதிப்பு, புதிய நிறுவனங்களால் எதிர்கொள்ளும் போட்டி இவற்றால் இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வெள்ளைக்காலர் வேலை என்று பெருமையுடன் அழைக்கப்பட்டு வந்த ஐடி துறையில் இந்த ஆண்டு அதிக அளவில் பணிநீக்கம் துவங்கியுள்ளது.
இதனால் அதிக சம்பளம் பெறும் மூத்த ஊழியர்களுக்கு பாதிப்பு வரும் என்று கூறப்பட்ட நிலையில் முன்னணி ஐடி நிறுவனமான காக்னிசன்ட் ஆயிரம் ஊழியர்களுக்கு 9 மாத சம்பளம் தந்து ராஜினாமா செய்ய அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிறுவனம் மேலும் 6ஆயிரம் ஊழியர்களுக்கு வாசலை காட்டும் என்ற பேச்சும் நிலவுகிறது.
20% பேர் சிறப்பானவர்கள்
விப்ரோ நிறுவனம் எதிர்பார்த்த வருவாய் ஈட்டவில்லை மற்றும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்காததால் 10சதவீதம் ஊழியர்களை இழக்க தயாராகி வருகிறது. கேப்ஜெமினி நிறுவனம் 9000ஆயிரம் பேரின் பணியை பறிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியரின் வேலை மதிப்பீடு செய்யப்பட்டு அதனடிப்படையில் பணிநீக்கம் செய்யப்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஐடி துறையில் பணியாற்றுவோரில் 20சதவீதம் பேர் மட்டுமே எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் பணித்திறமை உள்ளவர்கள் என்று கண்டறிந்துள்ளது.
2லட்சம் பேருக்கு ஆபத்து
கடந்த பிப்ரவரி மாதம் நாஸ்காம் இந்தியா லீடர்ஷிப் போஃரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முடிவில் ஏற்கனவே வெளியான செய்திகள் போல இந்த ஆண்டில் 56 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணியிழக்க நேரிடும் என்பதற்கு பதிலாக அடுத்த 3 மாதங்களில் ஏறத்தாழ 2 லட்சம் பேர் பணியிழக்க நேரிடும் என்பது தெரிய வந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மாற்றத்திற்கு தயாராகாதவர்கள்
தொழிற்போட்டி காரணமாக நிறுவனங்கள் உயர்தர தொழில்நுட்பத்திற்கு மாறி வரும் நிலையில் இந்த தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்ளாத 50 முதல் 60 சதவீதத்திலான ஊழியகர்களின் பணியை பறிக்க ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
சிறு நகர ஐடி ஊழியர்களுக்கு சிக்கல்
பெரும்பாலும் இந்த வேலை இழப்பு மும்பை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் இல்லாமல், கோவை போன்ற 2ம் கட்ட நகரங்களில் உள்ள ஐடி நிறுவன ஊழியர்களே பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறிக்கொள்ளாத 35 வயதிற்கு மேற்பட்டவர்களே பணியிழக்கும் பட்டியில் உள்ளதால் அவர்களுக்கான அடுத்த வாய்ப்பும் சற்று கேள்விக்குறியான விஷயமாக உள்ளதாகவே ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.