மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. வாய்க்கூசாமல் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்.. மீனவர்கள் கொந்தளிப்பு
திருவள்ளூர்: கப்பல்கள் விபத்துக்குள்ளான பகுதியில் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார். இது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 28ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட எம்.டி.பி.டபிள்யூ மாபிள் என்ற கப்பலும் மும்பையில் இருந்து டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு வந்த எம்.டி.பி. டவுன் என்ற கப்பலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் 2 கப்பல்களும் பெரும் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தால் கப்பல்களில் இருந்து கசிந்த கச்சா எண்ணெய் கடற்பரப்பில் பரவியது. எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவியுள்ளது.இதனால் அப்பகுதிகளில் மீன்கள் மற்றும் ஆமைகள் அதிகளவில் செத்து ஒதுங்கி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கடலுக்கு செல்லாத மீனவர்கள்
இதனால் கடுமையான துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் ஏற்படும் ஆபத்தும் உருவாகியுள்ளது. கடற்பரப்பில் எண்ணெய் பரவியிருந்ததால் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எந்திரங்களை கொண்டு அப்புறப்படுத்துங்கள்
எண்ணெய் பணியாளர்களை கொண்டே அள்ளப்படுவதால் அவற்றை துரிதமாக அகற்ற முடியவில்லை. இதனால் நவீன எந்திரங்களை கொண்டு எண்ணெய்யை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். கச்சா எண்ணெய் கசிவால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை
இந்நிலையில் கப்பல்கள் விபத்துக்குள்ளான துறைமுகப் பகுதியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது '' கடலில் கச்சா எண்ணெய் கலந்ததால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
கச்சா எண்ணெய் பாதுகாப்பாக அகற்றப்படும்
சேதமடைந்த கப்பலை பாதுகாப்பாக துறைமுகத்துக்குள் கொண்டு வரும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் கப்பலில் இருக்கும் 27 பேரை மிட்ட பின் கச்சா எண்ணெய் பாதுகாப்பாக அகற்றப்படும். இவ்வாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு
மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மீன்கள், ஆமைகள் உள்ளிட்ட கடற் உயிரினங்கள் செத்து ஒதுங்குவதால் கடுமையான துர்நாற்றத்தில் போராடி வருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கச்சா எண்ணெய் கசிந்து கடற்பரப்பில் பரவியுள்ளதால் மீன்பிடிக்க செல்ல முடியவில்லை என்று கூறியுள்ள மீனவர்கள் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.