வயிற்றிலேயே இறந்த குழந்தையால் பேராசிரியை பலி - கணவர் மீது பெண்ணின் தந்தை புகார்!
ஆலந்தூர்: சென்னை கீழ்க்கட்டளையில் வயிற்றில் இருந்த குழந்தை இறந்ததால், உயிருக்கு போராடிய கல்லூரி பேராசிரியை பரிதாபமாக உயிரிழந்ததற்கு அவரது கணவர்தான் காரணம் என்று பேராசிரியையின் தந்தை பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை திருமுருகன் தெருவைச் சேர்ந்தவர் ஈஸ்வரமுர்த்தி. இவர், தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும், சென்னை அண்ணா நகர் திருமங்கலத்தைச் சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி திருமணம் நடந்தது.
கவுசல்யா, சென்னை மண்ணிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். தற்போது கவுசல்யா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். கடந்த 11 ஆம் தேதி அண்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்துவிட்டு கீழ்க்கட்டளையில் உள்ள கணவர் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி உயிருக்கு ஆபத்தான நிலையில் கவுசல்யாவை அண்ணா நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரது வயிற்றில் இருந்து இறந்த குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
தொடர்ந்து உயிருக்கு போராடிய கவுசல்யாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி கவுசல்யாவின் தந்தை முனுசாமி, மடிப்பாக்கம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் அவர், தனது மகள் மற்றும் வயிற்றில் வளர்ந்த குழந்தையின் சாவுக்கு ஈஸ்வரமுர்த்திதான் காரணம். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.
இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் கவுசல்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுக்கும் குறைவாகவே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.