பெரியார் சிலை விவகாரம்.. எச் ராஜா கொடும்பாவியை எரித்து சென்னையில் போராட்டம்
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் எச் ராஜா கொடும்பாவியை எரித்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
சென்னை: வள்ளுவர்கோட்டத்தில் எச் ராஜா கொடும்பாவியை எரித்து மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா நேற்று முன்தினம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்ததை தொடர்ந்து தனது பதிவை நீக்கினார் எச் ராஜா. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா தனக்கு தெரியாமல் தனது அட்மின் அந்த போஸ்டை பதிவிட்டதாக அவர் கூறினார்.
மேலும் தனது பக்கத்தில் அந்த கருத்து வெளியானதால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். ஆனால் இன்றும் எச் ராஜாவை கண்டித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எச் ராஜாவின் கொடும்பாவியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகத்தைவிட்டு எச். ராஜா வெளியேற வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.