கூட்டணிக்குத் தாழ்ப்பாள் போட்டு விட்டு தா.பா., ஜி.ரா படங்களை வைத்து கூட்டம் போட்ட அதிமுக!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடந்த அதிமுக பிரச்சார கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டதற்கு இடதுசாரி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறின. இதையடுத்து அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் திருச்சி தொகுதிக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டம் நடந்த அரங்கம் மற்றும் சாலையோரமாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பேனர்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோரின் படங்கள் இருந்தன.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் எம். சின்னதுரை கூறுகையில்,
கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னரும் எங்கள் கட்சி தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்துவது நாகரிகமற்ற செயல் ஆகும். இது குறித்து கட்சி தலைமைக்கு தெரிவித்துள்ளோம். இனியும் இது போன்ற செயல்களில் அதிமுக ஈடுபடக் கூடாது. மீறினால் எங்களின் நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் க. சி. விடுதலைக்குமரன் கூறுகையில்,
கூட்டணியில் இல்லாத தலைவர்களின் புகைப்படங்களை பயன்படுத்தக் கூடாது என்ற அடிப்படை நாகரிகம் கூட தெரியாதவர்களாக அதிமுகவினர் இருக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து கட்சி தலைமைக்கு தகவல் கொடுத்துள்ளோம். தேர்தல் விதிகளை மீறி கூட்டம் நடத்தியுள்ளனர். மேலும் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு எல்லாம் உணவு பொட்டலம் வழங்கியுள்ளனர். இதை எல்லாம் தேர்தல் அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.