சிவாஜியின் 90வது பிறந்தநாளான அக்டோபர் 1ல் மணிமண்டபம் திறப்பு...முதல்வர் திறந்துவைக்கிறார்!
நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை : சென்னை அடையாறில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நடிகர் சிவாஜிகணேசனின் மணிமண்டபம் அக்டோபர் 1ம் தேதி திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் மணிமண்டபம் கட்டப்படும் என்று 2015-ம் ஆண்டு, ஆகஸ்ட் 26-ம் தேதி, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, அடையாறில் சத்யா ஸ்டுடியோ எதிரில் மணிமண்டபம் கட்டும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி தொடங்கியது. இப்பணிகள் மே மாதம் இறுதியில் நிறைவடைந்தன. இந்நிலையில் இந்த மணிமண்டபம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
சிவாஜிகணேசனின் மணிமண்டபத்தை அவரது 90வது பிறந்தநாளான அக்டோபர் 1ம் தேதி திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் சிவாஜி ரசிகர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி சிவாஜி மணிமண்டபம் திறந்து வைக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிச்சாமி மணிமண்டபத்தை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக சிவாஜி கணேசனின் குடும்பத்தார் மற்றும் திரைத்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜிகணேசனின் சிலை மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.