முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்!
சென்னை: தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் எழுத்தாளர் 'ஞானபீட' விருது பெற்ற ஜெயகாந்தன் சென்னையில் இன்று காலமானார்.
தமிழ் இலக்கிய உலகின் முன்னோடி ஆளுமைகளில் முதன்மையானவர் ஜெயகாந்தன். சிறுகதைகள், புதினங்கள், திரைப்படங்கள் என பன்முக ஆளுமை கொண்டவர்.
1934ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தவர். பின்னர் இளம்வயதில் சென்னைக்கு குடியேறிய அவர் தீவிர இடதுசாரியாக செயல்பட்டார். 1950-60களில் தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
பல்வேறு பத்திரிகைகளில் ஜெயகாந்தன் படைப்புகள் வெளியாகி பெரும் அங்கீகாரத்தை தேடித் தந்தன. உன்னைப் போல் ஒருவன், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற ஜெயகாந்தனின் நாவல்கள் திரைப்படங்களாகின. உயரிய இலக்கிய விருதான 'ஞானபீட' விருது பெற்றவர் ஜெயகாந்தன்.
கடந்த சில ஆண்டுகளாக முதுமையால் எழுதுவதை நிறுத்தியிருந்தார் ஜெயகாந்தன். சென்னையில் இன்று இரவு உடல்நலக் குறைவால் ஜெயகாந்தன் காலமானார். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு பேரிழப்பாகும்.