மேய்ந்த ஆட்டை பாய்ந்து கவ்விய சிறுத்தை... நீலகிரி மக்கள் அச்சம்.. பரபரப்பு வீடியோ!
ஆடு ஒன்றினை சிறுத்தை பாய்ந்து கவ்வி இழுத்து சென்றது.
Recommended Video
நீலகிரி: மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றினை பாறைக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்று பாய்ந்து கவ்வி இழுத்து சென்றது. இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி அம்மாவட்ட மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் பெரும்பாலும் அடர்ந்த வனங்கள் சூழ்ந்த பகுதியாகும். அதனால் இங்கு யானை, புலி, கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நிறையவே வாழ்ந்து வருகின்றன. சில நேரங்களில் இவைகள் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விடுகின்றன.
கால்நடைகள் வேட்டை
வனத்தில் உள்ள விலங்குகள் இப்படி குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுவதுடன், விளைநிலங்களை சேதப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்து விடுகின்றன. மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகளையும் வேட்டையாடி வயிறு நிரப்பி செல்கின்றது.
பாறையில் பதுங்கியது
ஊட்டி நொண்டிமேடு பகுதியில் கடந்த சில தினங்களாகவே சிறுத்தை ஒன்று கண்ணில் பட்டதாக சிலர் கூறி வந்தார்கள். அதனால் அந்த பகுதி மக்கள் அச்ச உணர்வுடனேயே நடமாடி வந்தனர். இந்நிலையில் நேற்றுகூட மேய்ச்சலுக்காக நிறைய ஆடுகள் விடப்பட்டிருந்தன. அப்போது ஒரு சிறுத்தை அங்கிருந்த பாறை ஒன்றில் பதுங்கியிருந்தது.
தலைதெறித்து ஓடின
புற்களை ஆடுகள் ஆர்வத்துடன் மேய்ந்த சமயம் பார்த்து, அந்த ஆட்டு கூட்டத்தில் பாய்ந்தது. அவ்வாறு பாய்ந்த வேகத்தில் ஒரு ஆட்டையும் கப்பென்று வாயில் கவ்விக் கொண்டது. இதை பார்த்த மற்ற ஆடுகள் தலைதெறிக்க சிதறி நாலாபுறமும் ஓடின. ஆட்டை கவ்விய சிறுத்தையோ மின்னல் வேகத்தில் அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.
வைரல் வீடியோ
பாறையில் மறைந்திருந்து, பின்னர் பதுங்கி பாய்ந்த சிறுத்தை ஆட்டை கவ்வி ஓடியதை அங்கிருந்த ஒருவர் எதேச்சையாக செல்போனில் படம் பிடித்து விட்டார். பின்னர் இந்த வீடியோ வைரலாகி அந்த பகுதி மக்களை மேலும் பீதிக்கு உள்ளாக்கி உள்ளது. வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். ஆனாலும் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வருகிறது.