கேரள வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சிறுத்தை உடல் கண்டெடுப்பு
செங்கோட்டை: கேரள வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சிறுத்தை ஒன்றின் உடலை வனத்துறையினர் கண்டெடுத்துள்ளனர்.
தமிழக-கேரள மாநிலங்களை இணைக்கும் மேற்குத் தொடர்ச்சிமலை வனப்பகுதியான நெல்லை மாவட்டம் ஆரியங்காவு, அச்சன்கோவில் வனப்பகுதிகளில் யானை, மான், மிளா. கரடி, சிறுத்தை, காட்டு எருமை உள்ளிட்ட விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனப்பகுதியில் வாழும் விலங்குகள் அவ்வப்போது இரவு நேரங்களில் ஊருக்குள் வருவதும், அச்சன்கோவில் செல்லும் சாலைகளில் நடமாடுவதும் வழக்கம்.
இந்நிலையில் இங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் நேற்று வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர். அப்போது கூட்டப்பல் என்ற பகுதியில் உள்ள நீரோடையில் 140 செ.மீ நீளமுள்ள ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது. அதனைக் பார்த்தவர்கள் அச்சன்கோவில் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெவித்தனர்.
தகவலின் பேரில் கொல்லம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஹரிகுமார், சோனி வர்க்கீஸ், அணில் ஆண்டணி, ஷா நவாஸ், அன்வர், மருத்துவர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலை கைப்பற்றினர். பிரேத பரிசோதனையில் காட்டு எருமை தாக்கி சிறுத்தை உயிரிழந்திருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.