நெல்லை அருகே மீண்டும் சிறுத்தை அட்டகாசம்.. பீதியில் பொதுமக்கள்
கடையம் சுற்றித்திரியும் சிறுத்தை கூண்டில் சிக்காததால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
தென்காசி: நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் மீண்டும் சிறுத்தை அட்டகாசம் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கடனாநதி அணை அடிவாரத்தில் அமைந்துள்ள விவசாய கிராமம் பெத்தான்பிள்ளைக் குடியிருப்பு. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்ட வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
மலையடிவாரத்தில் உள்ள வயல்கள் மற்றும் தோட்டங்களில் விளைவிக்கப்படும் நெல், வாழை, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்தி செல்கின்றன. மேலும் கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடு, மாடு, நாய் வளர்ப்பு விலங்குகளை தூக்கிச் செல்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தமிழக - கேரளா எல்லையான புளியரை முதல் அம்பாசமுத்திரம், கடையம் வரை சிறுத்தையின் அட்டகாசத்தால் மக்கள் நிம்மதியை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையம் பெத்தான்பிள்ளை குடியிருப்பில் மீண்டும் சிறுத்தை தலைகாட்ட தொடங்கியுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது பொதுமக்கள், வனத்துறையினரை கூண்டு வைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கூண்டு வைப்பதை விட சிறுத்தை வருவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் சனிக்கிழை கடையத்தில் சிறுத்தைகள் அட்டகாசம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மக்கள் தங்களுக்கு வனவிலங்குகளால் உயிருக்கு ஆபத்து ஏற்ப்டுமோ என்று அச்சம் இருப்பதாகவும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.