இரவு முழுவதும் உறுமல் சத்தம்... பாபநாசம் அருகே நடமாடும் சிறுத்தையை பிடிக்க கோரிக்கை
சிறுத்தையை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம்: தொடர்ந்து சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து கொண்டிருப்பதால் அதனை கூண்டுவைத்து பிடிக்க பாபநாசத்தின் மலையடிவார பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாபநாசத்தின் மலையடிவாரத்தை ஒட்டிய பகுதிகளுக்கு, அருகிலிருக்கும் வனப்பகுதிகளிலிருந்து விலங்குகள் வந்துவிடுகின்றன. மலையடிவார பகுதியில் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு சொந்தமான ஆடுகள், கோழிகள், நாய்களை அடித்து கொன்று வருகின்றன. ஆடுகள், கோழிகளை நம்பியே ஜீவனம் நடத்துவதால் எப்படியாவது வனவிலங்குகளை ஊருக்குள் வராமல் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து திருப்பதியாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் என்னும் விவசாயி கூறும்போது, நேற்றிரவுகூட சிறுத்தையின் உறுமல் கேட்டதாக கூறுகிறார். நள்ளிரவு உறுமல் சத்தம் கேட்டு எழுந்து போய் பார்த்தால், தன்னுடைய ஆட்டை ஒரு சிறுத்தை அடித்து கொன்று சாப்பிட முயன்றதாகவும், அதனால் சத்தம் போட்டு ஊர்மக்களை கூப்பிட்டதாகவும் முருகன் கூறுகிறார்.
எனவே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையினால் சரியாக தூங்க முடியவில்லை என்றும், வெளியில்கூட வர முடியாமல் பயமாக உள்ளதாகவும் திருப்பதியாபுரம் மக்கள் கூறுகின்றனர். பீதியை கிளப்பி வறும் சிறுத்தையை விரைவில் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.