மனிதனிடம் மட்டுமே காணப்படக்கூடிய தொழுநோய்.. நிபுணர் பேச்சு
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தொழுநோய் கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு வந்தவர்களை மாணவி உமா மஹேஸ்வரி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . மருத்துவமில்லா மேற்பார்வையாளர் வேங்கட சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இம் முகாமில் தொழுநோய் மருத்துவமில்லா மேற்பார்வையாளர்கள் பரமசிவன், சந்திரசேகரன் ஆகியோர் மாணவ, மாணவிகளை முற்றிலுமாக பரிசோதனை செய்து மாணவ, மாணவியரிடம் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இது முற்றிலும் குணப்படுத்த கூடிய நோய் தான். இளம் மாணவர்களாகிய நீங்கள் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வை உங்களை சுற்றி உள்ள அனைவரிடமும் சொல்லி இந்நோய் பரவமால் தடுக்க முயற்சி எடுங்கள் என பேசினார். மாணவிகள் பரமேஸ்வரி, ராஜி, காயத்ரி மாணவர்கள் விஜய், ஜீவா ஆகியோர் தங்கள் சந்தேகங்களை கேட்டு பதில் பெற்றனர். ஆசிரியை முத்து லெட்சுமி முகாமுக்கான ஏற்பாடுகளை செய்தார்.மாணவி பார்கவி லலிதா நன்றி கூறினார்.
தொழு நோய் குறித்து முகாமில் விரிவாக கூறப்பட்ட தகவல்கள்:
தொழு நோய் என்பது தோல் வியாதி. இது பரம்பரையாகவோ, சாபத்தின் காரணமாகவோ வருவது கிடையாது. இது தீண்டதகாததும் அல்ல. தொழு நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து விட்டால் நல்லது. இந்நோய் உடலில் 7 நரம்புகளை பாதிக்கிறது. முதலில் உணர்வு நரம்புகளை பாதிக்கிறது. தேமல் நிலையில் ஆரம்பமாகி நரம்புகளை பாதிக்கும். உருவ மாற்றம் ஏற்படும். தடுப்பு மருந்து கிடையாது. இதனை நாம் கண்டுபிடித்து தான் மருத்துவம் செய்ய வேண்டும்.
தேமல் அனைத்துமே தொழுநோய் கிடையாது. தேமல் தொழுநோய் என கண்டுபிடிக்க அந்த தேமல் இருக்கும் இடத்தில் தொடு உணர்வு இருக்காது. வலி உணர்வு இருக்காது. சுடு உணர்வு இருக்காது. இந்நோய் பாதித்தால் அந்த இடத்தில வியர்வை இருக்காது. முடி வளராது. கூட்டு மருந்து கொடுத்தால் ஆறு மாதங்களில் நோயை குணபடுத்தி விடலாம். நோயால் பாதிக்கபட்ட நபர் தும்மும்போதும், இருமும் போதும் காற்றின் மூலம் இந்நோய் பரவும்.
காலரா, டெங்கு காய்ச்சல் போன்று நோய் உடனடியாக பரவாது. இந்நோய்க்கு காரணமான கிருமி சோம்பேறித்தனம் வாய்ந்தது. நோய் தாக்கி சுமார் 2 ஆண்டுகள் அல்லது 40 ஆண்டுகளுக்கு பிறகு கூட நோய்க்கான அறிகுறிகள் தெரிய வரும். எந்த மனிதனுக்கும் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. 95 சதவிகிதம் பாதிக்காது. ஆனால் 5 சதிவிகிதம் பாதிக்க வாய்ப்புள்ளது.
இந்த வியாதி எந்த மிருகங்களுக்கும் இல்லை. அதனால்தான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கபடவில்லை. மனிதனில் மட்டுமே நோய் காணப்படுகிறது. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் இந்நோய் வந்துவிட்டால் மறைக்க கூடாது. சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் இதற்கு என்று வாரம் தோறும் வெள்ளி கிழமைகளில் தனி அலுவலர் நோயை கண்டுபிடித்து ஆலோசனைகள் சொல்வார்கள். அவர்கள் உங்களுக்கான சந்தேகங்களுக்கு பதில் அளித்து நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து கட்டுபடுத்த உதவி செய்வார்கள். இது முற்றிலும் குணப்படுத்தக் கூடிய நோய் தான். இளம் மாணவர்களாகிய நீங்கள் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வை உங்களை சுற்றி உள்ள அனைவரிடமும் சொல்லி இந்நோய் பரவமால் தடுக்க முயற்சி எடுங்கள் என கூறினார்கள்.