நெல்லையில் போதிய மழை இல்லாததால் தேங்காய் விலை ’கிடுகிடுவென’ உயர்வு
நெல்லைப் பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாததால் தேங்காய் விலை அதிகரித்து உள்ளது.
நெல்லை : பருவமழை நன்றாக பெய்தும் வறட்சி நிலவுவதால் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. இதனால் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தென்னை விவசாயம் நன்றாக நடப்பது வழக்கம். வடகரை, பண்பொழி, மேக்கரை, மத்தளம்பாறை, குற்றாலம், சிவகிரி, களக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ளன.
மலையோர பகுதிகளில் தென்னை மரங்களை ஏக்கர் கணக்கில் பயிரிட்டு இருக்கும் விவசாயிகள் தேங்காயை சீசன் காலத்தில் மூடை மூடையாக அறுவடை செய்வர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகள் வறட்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.
இதில் பல இடங்களில் தென்னை போதிய தண்ணீர் இல்லாமல் கருகின. பட்டு போன தென்னை மரங்களால் இப்போது தேங்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு தென்னை மரத்தில் இருந்து இரண்டு தேங்காய் மட்டுமே பறிக்கப்பட்டு வருவதால் அதை சந்தைக்கு அனுப்ப விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த காரணத்தால் தேங்காய் விலை உயரத் தொடங்கியுள்ளது. இன்று காலை நிலவரப்படி கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கப்படுகிறது. பல்வேறு இடங்களில் சில்லு தேங்காய் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. இது தவிர வெளி மாவட்டத்தில் இருந்து வரும் தேங்காய்களின் வரத்தும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.