தீபாவளி வந்துருச்சு... ஆனால் தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் குறைஞ்சிருச்சே.. ஏமாற்றத்தில் மக்கள்!
சென்னை: தீபாவளிக்கு இன்னும் சரியாக ஒரு வாரமே உள்ள நிலையில் சென்னைத் தீவுத்திடலில் பட்டாசு வியாபாரிகள் கடைகள் அமைக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.
வரும் 10ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே புத்தாடைகளுக்கு அடுத்த இடத்தில் பட்டாசுகளே இடம் பெறுகின்றன. பட்டாசு வெடித்துக் கொண்டாடினால் தான் தீபாவளியே முழுமை பெறும்.
எனவே, தீபாவளி நெருங்கி விட்டாலே பட்டாசுக் கடைகளும் ஆங்காங்கே முளைத்து விடும். சென்னை தீவுத்திடலிலும் கடந்த 2011ம் ஆண்டு முதல் பட்டாசு வியாபாரிகள் கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
அனுமதி...
அதன்படி, 5வது ஆண்டாக இந்தாண்டும் தீவுத்திடலில் 80 பட்டாசுக் கடைகள் அமைக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், எதிர்பார்த்தப்படி பட்டாசுக் கடைகள் அமைக்கப்படவில்லை. 54 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
விற்பனை...
தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால், நேற்று பட்டாசுக் கடைகளைத் திறக்க அனுமதி பெற்ற உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்தனர். நேற்று காலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில கடைகளில் மட்டுமே விற்பனை தொடங்கப்பட்டது.
உறுதிமொழி...
முதல் நாளான நேற்று தீவுத்திடலில் கடைகள் அமைக்கும் வியாபாரிகள் அனைவரும், ‘மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்டதும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதுமான சீன பட்டாசுகளை வாங்கவோ, விற்கவோ மாட்டோம்' என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
குறைவான கடைகள்...
பரம்பரையாக தொழில் செய்து வருபவர்கள் மட்டுமே இந்த ஆண்டும் கடைகள் அமைத்துள்ளனர். முன்பு போல் விற்பனையில் ஆர்வம் இல்லாததே பட்டாசுக் கடைகள் குறைவாகத் திறக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில்...
கடந்த ஆண்டு 82 பட்டாசு கடைகள் தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு முந்தைய ஆண்டில் 100 கடைகளுக்கு மேல் அமைக்கப்பட்டு இருந்தன. ஆனால், இந்தாண்டு 54 கடைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன.
வளர்ச்சியடைந்த புறநகர் பகுதிகள்...
முன்பெல்லாம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவர்கள் பட்டாசு, புத்தாடை போன்றவை வாங்க நகருக்குள் தான் வருவர். ஆனால் தற்போது புறநகர்களே நன்கு வளர்ச்சியடைந்து விட்டன. இதனால் பட்டாசு வாங்குவதற்காக தீவுத்திடலுக்கு வர மக்கள் அவ்வளவாக விரும்புவதில்லை. இதுவும் பட்டாசுக் கடைகளை வியாபாரிகள் அமைக்காததற்கு முக்கியக் காரணம் ஆகும்.
அடைமழையும் காரணம்...
இது தவிர தற்போது அடைமழை பெய்து வருவதாலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். இந்த சூழ்நிலையில் கடைகள் அமைத்து வியாபாரம் இன்றி அமர்ந்திருக்க வியாபாரிகள் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
மக்கள் ஏமாற்றம்...
இதற்கிடையே ஒவ்வொரு கடையாக அலைந்து விதவிதமான பட்டாசுகள் வாங்கலாம் என தீவுத்திடலுக்கு வரும் மக்கள், வெறும் கடைகளைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.