மறக்க முடியுமா? சுதந்திரத்துக்காக போராடிய இந்த வீரத் தியாகிகளை..!!
நாட்டின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் விடுதலைக்காக பாடுபட்ட சில தியாகிகளை நினைவுகூருவோம்.
Recommended Video
சென்னை: நாட்டின் 72வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் விடுதலைக்காக பாடுபட்ட சில தியாகிகளை நினைவுகூருவோம்.
நாட்டின் 72வது சுதந்திர தினம் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் சுதந்திரத்துக்காக பாடுபட்ட தமிழகத்தின் வீரத் தியாகிகள் சிலரை நினைவுகொள்ளுவோம்.
அழகு முத்துக்கோன்
இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் விடுதலை போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன்
பூலித்தேவன்
இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் முன்னோடியாக கருதப்படுகிறார் பூலித்தேவன். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு' என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
கட்டபொம்மன்
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். செப்டம்பர் 9ஆம் தேதி 1799 இல் ஆங்கிலேயர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. அக்டோபர் 1 ஆம் தேதி 1799 இல் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டார். அக்டோபர் 16 1799 இல் ஆங்கிலேயத் தளபதி பேனர்மேன் ஆணைப்படி கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
வேலுநாச்சியார்
தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி வேலுநாச்சியார் ஆவார். இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலை போராட்ட வீராங்கனை ஆவார்
மருது சகோதரர்கள்
மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்.
பாரதியார்
மகா கவி பாரதியார் தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, பாரதி என்ற பட்டம் வழங்கினார். தனது உரைகள் கவிதைகள் மூலம் வெள்ளையர்களுக்கு எதிரனா போராட்டத்தை மேற்கொண்டார்.
வாஞ்சிநாதன்
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படும் போராளிகளுக்கு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரியில் உதவிகள் கிடைத்தன. அங்குள்ள போராளிகளுடன் தொடர்பு கொண்டார் வாஞ்சிநாதன். காலப்போக்கில் தமது அரசுப் பணியில் இருந்து விலகிப் புரட்சிப் பாதையில் தீவிரமானார். நண்பர்களுடன், ஆங்கிலேய ஆட்சியை ஒழித்துக்கட்ட ரகசியக் கூட்டங்களைக் கூட்டினார். நண்பர்களையும் தீவிரம் அடையச் செய்தார் வாஞ்சிநாதன்.
திருப்பூர் குமரன்
திருப்பூர் குமரன் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.1932 ஆம் ஆண்டு திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11 இல் உயிர் துறந்தார்.
தில்லையாடி வள்ளியம்மை
தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்காக போராடியவர் தில்லையாடி வள்ளியம்மை. போராட்டத்தில் ஈடுபட்ட தில்லையாடி வள்ளியம்மை தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்தார்.
வஉ சிதம்பரனார்
பிரிட்டன் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரிட்டன் அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
வி கல்யாணசுந்தரம்
பால கங்காதர திலகர் போன்றோரின் விடுதலைக் கிளர்ச்சிகளில் ஈடுபாடு கொண்டதனால் அவ்வேலையிலிருந்தும் அவர் நீங்கினார். திராவிடன், நவசக்தி போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்து நாட்டு விடுதலைக்குத் தொண்டாற்றினார்.
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
ராஜாஜி இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்.
ஜி சுப்பிரமணிய ஐயர்
ஜி சுப்பிரமணிய ஐயர், சுதேசமித்திரன் என்ற தமிழ் வார இதழை மார்ச்சு, 1882 இல் தொடங்கியவர். சமூக சிந்தனையாளர் மற்றும் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுப்பிரமணிய ஐயர் 1885 ஆம் ஆண்டில் பம்பாயில் இடம்பெற்ற இந்திய காங்கிரசின் முதலாவது மாநாட்டில் அம்மாநாட்டின் முதலாவது தீர்மானமாக இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விசாரணை நடத்துவது சம்பந்தமாகக் கொண்டு வந்தார்
வ வெ சு ஐயர்
இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
வ ராமசாமி
வ ராமசாமி 1930ஆம் ஆண்டு வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்றார். அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். அவை பின்னாளில் "ஜெயில் டயரி" என்ற பெயரில் நூலாக வெளி வந்தது.
ப ஜீவானந்தம்
ப ஜீவானந்தம் ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்
சுப்பிரமணிய சிவா
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடியவர். தமிழகத்தின் ஏராளமான மக்களுக்கு விடுதலைத் தாகம் ஏற்படச்செய்த சிறந்த மேடைப்பேச்சாளர் மற்றும் சிறந்த இதழாளர்