காவிரி விவகாரம்: 29ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்.. ஸ்டாலின் கேள்விக்கு ஓபிஎஸ் பதில்!
மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் பதிலளித்துள்ளார்.
சென்னை: மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்டாலினுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் 29 ஆம் தேதி வரை பொறுத்திருப்போம் என பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலையே சட்டசபை சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு, 16, 17, 18-ந் தேதிகளில் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், சட்டசபை இன்று மீண்டும் கூடியது. காலை 10 மணிக்கு சட்டசபை தொடங்கியது. மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கு இரங்கல் சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது.
ஸ்டாலின் வலியுறுத்தல்
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காவிரி மேலாண் வாரியம் தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து ஏதேனும் பதில் வந்ததா என்று கேள்வி எழுப்பினார். பாஜக அரசு மீது கொண்டு வரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஓபிஎஸ் பதில்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு வேண்டும் என்றே காலம் தாழ்த்துவதாக ஸ்டாலின் சாடினார். இதைத்தொடர்ந்து எதிர்கட்சித் தலைவரின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
போராட்டம் தொடரும்
காவிரி விவகாரத்தில் இன்னும் அவகாசம் இருப்பதால் அதுவரை பொறுத்திருப்போம் என ஓ பன்னீர்செல்வம் பதில் கூறினார். இவ்விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமான தகவல் வரும் வரை அதிமுக எம்.பி-க்களின் போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.
நாடாளுமன்றம் முடக்கம்
11-வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி-க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். அதிமுக எம்.பிக்களின் தொடர் போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
பொறுத்து பார்ப்போம்
ஆகவே மத்திய அரசு இவ்விவகாரத்தில் என்ன செய்கிறது என்று வரும் 29-ம் தேதி வரை பொறுத்து பார்ப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறிய ஓபிஎஸ், மார்ச் 29ம் தேதிக்குள் மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.