செத்துப் போய்ருவேன்.. அதிமுக எம்.எல்.ஏவால் பாதிக்கப்பட்டவர் ஜெ.வுக்கு பரபரப்பு கடிதம்
சென்னை: ஈரோடு மாவட்டம், பவானி அதிமுக எம்.எல்.ஏ. நாராயணன் தன்னை மோசடி செய்து விட்டார். அவர் மீது புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி பவானியைச் சேர்ந்த ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வாசுதேவன். இவர் ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள கடிதம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
பவானி அண்ணாநகரில் எனக்கு சொந்தமான வீடு மற்றும் ஜமுக்காள பேக்டரி விரிவாக்கத்திற்கு பணம் தேவைப்பட்டதால் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு ரூ.23.50 லட்சத்துக்கு பத்திரங்களை அடமானம் வைத்து கடன் வாங்கினேன். ஆனால், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் எனது சொத்துகளை விற்க முடிவு செய்தேன்.
இதற்கிடையில் வீடு ஏலத்திற்கு வந்தது. எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் அதிமுக எம்எல்ஏவான நாராயணன், அவரது மனைவி சரஸ்வதி மற்றும் பினாமிகள் பெயரில் என் வீட்டை ஏலம் எடுத்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தேன். கடந்த 3 ஆண்டுகளாக இப்பிரச்னை இருந்து வந்த நிலையில் நாராயணன் என்னை அழைத்து பேசினார். எனது வீட்டை ரூ.1.40 கோடிக்கு வாங்கி கொள்வதாக கூறினார். நானும் ஒத்துக் கொண்டேன்.
வங்கியில் நான் வாங்கிய கடனை முதலில் செலுத்துவதாக கூறினார். பின்னர் ரூ.88.50 லட்சம் பணத்தை கடனுக்காக செலுத்தி விட்டு பத்திரத்தை வாங்கினார். அதற்கு பிறகு அவரது மனைவி சரஸ்வதி பெயரில் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி இடத்தை கிரையம் செய்து கொடுத்தோம். கிரையம் செய்த பிறகு மீதமுள்ள ரூ.50 லட்சத்தை தருவதாக கூறினார். ஆனால் அந்த பணத்தை கேட்டபோது தராமல் மோசடி செய்து வருகிறார்.
பலமுறை கேட்டும் அவர் தர மறுத்து வருகிறார். இதுதொடர்பாக பலமுறை மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தேன். ஆனால் எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனக்கு சேர வேண்டிய பணம் கிடைக்காததால் குடும்பத்தோடு வாடகை வீட்டில் வசிக்கிறோம்.
இந்த பணம் கிடைக்கவில்லையென்றால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி எனக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆனால் இது மோசடிப் புகார் என்றும், தனது கட்சியினர் சிலரே தனக்கு எதிராக வாசுதேவனை தூண்டி விட்டுள்ளதாகவும் எம்.எல்.ஏ. நாராயணன் மறுத்துள்ளார்.