டிடிவி தினகரனை நெருக்கும் ஃபெரா வழக்கு - மார்ச் 22ல் மீண்டும் ஆஜராக எழும்பூர் கோர்ட் உத்தரவு
அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சென்னை: ஜெ.ஜெ. டி.வி. நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக டிடிவி தினகரன் எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். மார்ச் 22ஆம் தேதி மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுக துணைப்பொதுச்செயலாளராகவும், ஆர்.கே. நகர் வேட்பாளராகவும் உள்ள டி.டி.வி.தினகரன் மீது இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகள் விசாரிக்கப்பட்டது.
ஜெ.ஜெ. டி.வி. என்ற பெயரில் செயல்பட்ட தொலைக் காட்சி நிறுவனத்திற்கு ஒளிபரப்பு கருவிகள் வாங்கியதில் அன்னிய செலாவணி முறைகேடு நடந்ததாக அமலாக்கப் பிரிவு சார்பில் டி.டி.வி.தினகரன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது. மேலும் 'பரணி பீச் ரிசார்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில் மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ரூ.3 கோடி கடன் பெறப்பட்டது. இந்த கடன்தொகையில் ரூ.2.5 கோடி கோடநாடு எஸ்டேட் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு பணம்
வங்கியில் கடன்பெற்ற ரூ.3 கோடியும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் டாலர் நோட்டுகள் மூலம் திருப்பி செலுத்தப்பட்டது. இதிலும் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாக டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு இன்னொரு வழக்கும் தொடர்ந்தது. இந்த இரண்டு வழக்குகளும் எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அப்பீல் வழக்கு
இதை எதிர்த்து அமலாக்கப் பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டி.டி.வி.தினகரன் மீதான இரண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளையும் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்று எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
20 ஆண்டு விசாரணை
20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிற இந்த வழக்குகள் மீண்டும் எழும்பூர் 2-வது பொருளாதார குற்றப்பிரிவு கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மலர்மதி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.டி.வி.தினகரன் நேற்று நேரில் ஆஜரானார்.
அமலாக்கப்பிரிவு எதிர்ப்பு
அவர் சார்பில் ஆஜரான வக்கீல் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். அதில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை இந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
நீதிபதி மறுப்பு
உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தவேண்டும் என்றும் அமலாக்கப் பிரிவு வக்கீல் கேட்டுக்கொண்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மலர்மதி உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும்வரை காத்திருக்க முடியாது என்றும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
22ல் ஆஜராக உத்தரவு
மார்ச் 22ஆம் தேதி அன்று வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்றும் நீதிபதி கூறினார். அன்றைய தினமும் டி.டி.வி.தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது. டி.டி.வி.தினகரன் வருகையையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது.