ரூ. 30 கோடி பணத்துடன் எல்ஐசி ஏஜென்ட் மாயம்... செய்யாறில் பரபரப்பு!
வாடிக்கையாளர்களிடம் எல்ஐசி காப்பீடு போட்டுத் தருவதாக கூறி ரூ. 30 கோடி வரை பணம் வசூலித்த செய்யாறைச் சேர்ந்த எல்ஐசி ஏஜென்ட் பெருமாள் தலைமறைவாகியுள்ளார்.
செய்யாறு : செய்யாறில் மாத தவணை, முன்பணம் என 200 பேரிடம் சுமார் ரூ. 30 கோடி வரை வசூல் செய்த எல்ஐசி ஏஜென்ட் பெருமாள் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார்.
செய்யாறு பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர் தன்னை எல்ஐசி ஏஜென்ட் என்று கூறி இருக்கிறார். மக்களை நேரில் சந்தித்து அவர்கள் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேரும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். எல்ஐசி என்பதால் நம்பமாக காப்பீடு நிறுவனம் என்று பலரும் பெருமாளிடம் பணம் தந்துள்ளனர்.
மாதத்தவணை, முன்பணம் என சுமார் 200 பேரிடம் ரூ. 30 கோடி வரை பெருமாள் வசூலித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் பெருமாளின் வீடு பூட்டிக் கிடக்கிறது, அவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து பெருமாளிடம் பணம் கொடுத்தவர்கள் அவருடைய வீட்டிற்கு முன் திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமறைவான பெருமாளை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று பணத்தை பறிகொடுத்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அவரை கைது செய்வதோடு பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.