தமிழகத்தில் ரூ. 35,000 கோடியைக் கொட்டும் எல்.ஐ.சி!
சென்னை: தமிழகத்தில் எல்.ஐ.சி நிறுவனம் 35 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அந்நிறுவனத்தில் செயல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பூக்கடை, பிரேஷர் பாலம் சாலையில் உள்ள மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் கட்டிடத்தில் வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படும் வகையில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்த குடிநீர் எந்திரம் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆர்.ரெகுபதி, எல்.ஐ.சி நிறுவனத்தின் தென்மண்டல மேலாளர் தா.சித்தார்த்தன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அப்போது, எல்.ஐ.சி தென்மண்டல மேலாளர் சித்தார்த்தன் , "எல்.ஐ.சி நிறுவனம் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. 2014-2015 நிதியாண்டில் சென்னை மண்டலத்தில் 3 ஆயிரத்து 600 கோடி மதிப்புள்ள புதிய பாலிசிகளை பெறவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
தற்போது, 2 ஆயிரத்து 200 கோடி மதிப்புள்ள பாலிசிகளை சேர்த்துள்ளோம். அதனால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிக பாலிசிகளை பிடித்துவிடுவோம் என்று நம்புகிறோம்.
2014 ஆம் டிசம்பர் 31 ஆம் தேதி வரை 47 ஆயிரத்து 794 மரண இழப்பீடு கோரப்பட்டுள்ளது. எல்.ஐ.சி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் முதலீடு செய்து வருகிறது. தமிழகத்தில் ரூபாய் 35 ஆயிரம் கோடிக்கு பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.