அரசியலமைப்பு சாசனபடியே எம்எல்ஏக்கள் நியமனம்- கிரண்பேடி
அரசியலமைப்பு சாசனபடியே எம்எல்ஏக்கள் நியமனம் செய்யப்பட்டனர் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
Recommended Video
புதுவை: புதுவையில் 3 நியமன எம்எல்ஏக்கள் அரசியல் சாசன விதிகளின் படியே நியமனம் செய்தேன் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.
பாஜகவின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வகணபதி ஆகியோர் பெயரை மத்திய அரசு நியமன எம்எல்ஏக்களுக்கு பரிசீலனை செய்து வந்தது. ஆனால் இதற்கு முதல்வர் நாராயணசாமி ஒப்புக் கொள்ளவில்லை.
இதனால் கிரண்பேடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மேற்கண்ட மூவரையும் அழைத்து அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து நியமனம் செய்தார். இதை எதிர்த்து புதுவை அரசு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது.
அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 3 நியமன எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதுகுறித்து துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறுகையில் அரசியலமைப்பு சாசன விதிகள்படியே எம்.எல்.ஏக்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை வலுப்படுத்தி உள்ளது என்றார் கிரண்பேடி.