சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு.. ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க 8 வாரம் காலகெடு விதித்த ஐகோர்ட்
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவரின் விடுதலை கோரிய வழக்கில் 8 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் மதுரை உத்தரவிட்டது.
மதுரை: 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதியை விடுவிக்க கோரிய மனுவை நிராகரித்த உள்துறை செயலரின் உத்தரவை ரத்து செய்து 8 வாரத்தில் மறுபரிசீலனை செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை சிறைக் கைதியாக உள்ளார் வீரபாரதி. இவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் 1999ம் ஆண்டில் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து வீரபாரதி தொடர்ந்த வழக்கில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் வீரபாரதி எம்பிஏ படித்து முதல் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஆயுள் தண்டனைக் காலம் முடிந்தும் 17 ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். அதனால் என்னை விடுதலை செய்ய வேண்டும். என்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ஆலோசனைக்குழுவில் விண்ணப்பம் செய்திருந்தேன். அந்த விண்ணப்பம் உள்துறை செயலரால் ஆகஸ்டு 28ம் தேதி நிராகரிக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர் வீரபாரதி நேரில் ஆஜராகி வாதிட்ட போது, தன்னைப் போன்றே தமிழகத்தில் உள்ள பல்வேறு சிறைச்சாலைகளில் ஏராளமானோர் தண்டனை காலம் முடிந்த பின்னரும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்று கூறினார்.
விசாரணையின் முடிவில், சிறை விதிப்படி மனுதாரரை விடுவிக்க முடியாது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது என்றாலும் அதே விதிப்பிரிவுகளின் விடுவிக்க இடமுண்டு. விதி 341(2)ன் படி, தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு காலம் சிறையில் இருந்தால் முன்கூட்டியே விடுவிக்க வழி உள்ளது. அதேநேரம் விதி 341(2)ல் ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவித்து 14 ஆண்டுகள் சிறையில் உள்ளவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று சொல்கிறது. எனவே, மனுதாரரின் மனுவை நிராகரித்த உள்துறை செயலாரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்றும், மனுதாரர் வீரபாரதியின் மனுவை 8 வாரத்திற்குள் உள்துறை செயலாளர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டனர். மேலும், ஏற்கனவே இதே போன்று நிராகரிக்கப்பட்ட மனுக்களையும் மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.