‘இந்தியாவின் மகள்’ மீதான தடையை நீக்க வேண்டும்: மத்திய அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: டெல்லியில் மருத்துவமாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப் பட்டது தொடர்பாக தயாரிக்கப் பட்ட ‘இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை தடையை நீக்கி இந்தியாவில் ஒளிபரப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டும் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி கோடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கிய இந்த சம்பவத்தைப் பற்றி லெஸ்லீ உட்வின் என்பவர் ‘இந்தியாவின் மகள்' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார்.
இந்த ஆவணப்படத்தில் மருத்துவமாணவியை பலாத்காரம் செய்து, தூக்கு தண்டனை விதிக்கப் பட்டுள்ள கைதியின் பேட்டியும் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து இதனை இந்தியாவில் ஒளிப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது. எனவே, இந்தியா தவிர மற்ற நாடுகளில் இந்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பியுள்ளது.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட ‘இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
நிர்பயா பாலியல் வன்கொடுமைச் சம்பவம் குறித்து உலகப் புகழ்பெற்ற ஆவணப் பட இயக்குனர் லெஸ்லீ உட்வின் தயாரித்துள்ள ‘இந்தியாவின் மகள்' என்ற ஆவணப் படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை உடனடியாக மத்திய அரசு நீக்க வேண்டும். கருத்துரிமையைப் பறிக்கும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.
நிர்பயா சம்பவத்தில் குற்றவாளியாக இருக்கும் முகேஷ் சிங்கின் பேட்டி அந்த வழக்கின் போக்கில் தாக்கம் ஏற்படுத்தும் என்ற காரணத்தைச் சொல்லி தடையை மத்திய அரசு நியாயப்படுத்தியிருக்கிறது. அது ஏற்புடையதல்ல. அந்த ஆவணப் படத்தில் முகேஷ் சிங்கின் பேட்டி மட்டுமின்றி நிர்பயாவின் பெற்றோர்களது நெஞ்சை உருக்கும் பேட்டிகளும், லீலா சேத், கோபால் சுப்ரமணியம் உள்ளிட்ட சட்ட நிபுணர்களின் பேட்டிகளும் உள்ளன என தெரிகிறது.
‘இந்தியாவின் மகள்' ஆவணப் படத்துக்கு விதித்திருக்கும் தடையை உடனடியாக மத்திய அரசு விலக்கிக் கொள்ளவேண்டும். நீதிபதி வர்மா கமிஷன் அளித்த பரிந்துரைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.