சென்னையில் மின்தடையால் லிப்ட்டில் சிக்கிய இளைஞர்... 4-வது மாடியில் இருந்து விழுந்து பலி
சென்னை: சென்னை சவுகார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சவுகார்பேட்டை பிகேஜி பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிந்து வருபவர் கணபதி. அந்த குடியிருப்பு 5 மாடிகளை கொண்டது. அதில் ஜந்தாவது மாடி அவர்கள் வசித்து வருகின்றனர். கணபதியின் மகன் அபிஷேக்(23). ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
நேற்று காலை அபிஷேக் வழக்கம்போல பணிக்கு செல்லவதற்காக வீட்டில் இருந்து, லிப்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். லிப்ட்டில் அவர் மட்டுமே இருந்துள்ளார். 5 மற்றும் 4-வது மாடிகளுக்கு இடையே லிப்ட் வந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால், லிப்ட்டுக்குள் சிறிது நேரம் காத்திருந்த அபிஷேக், பின்னர் அதிலிருந்து வெளியேற முயற்சி செய்தார்.
இதையடுத்து, லிப்ட்டின் கிரில் கதவுகளை அபிஷேக் திறந்துள்ளார். லிப்ட்டின் வாசல் ஓரம் வந்த அவர் மேலே இருந்த சுவரை பிடித்து வெளியேற முயன்றதாக தெரிகிறது. ஆனால் அப்போது அவர் எதிர்பாராத விதமாக லிப்ட்டுக்கும்-சுவருக்கும் இடையே இருந்த இடைவெளி வழியாக கீழே விழுந்தார்.
இதனால், லிப்ட் இருந்த பகுதிக்கு உள்ளேயே 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த அபிஷேக் பலத்த காயமடைந்தார். குடியிருப்பில் இருந்தவர்கள், அபிஷேக்கை மீட்டு, அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபிஷேக்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீஸார் வழக்குப் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.