எங்களது பிராண்ட் எப்போது மாறும்? - அருண் பாண்டியன் கேள்வியால் புன்னகைத்த ஜெயலலிதா
சென்னை: சட்டசபையில் காரசார விவாதங்கள் நடைபெறுவது ஒருபுறம் இருக்க சில நேரங்களில் ருசிகர விவாதங்களும், நகைச்சுவையை ஏற்படுத்தும் பேச்சுக்களும் பேசப்படுவது உண்டு. எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும் என்று சட்டசபையில் தேமுதிக அதிருப்தி எம்எல்ஏவான அருண்பாண்டியன், கேள்வி எழுப்பியதற்கு முதல்வர் ஜெயலலிதா புன்னகைத்தார்.
சட்டசபையில் நேற்றுன்று கேள்வி நேரம் முடிந்ததும், நடிகர் சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து பேசிய அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ அருண் பாண்டியன், ‘‘சிவாஜி கணேசனின் பாதிப்பு இல்லாமல் யாரும் நடிக்க முடியாது. அவருக்கு மணிமண்டபம் அமைப்பதன் மூலம் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகம் என்றுமே மறக்காது என்றார்.
கடைசியாக ஒரேயொரு கோரிக்கை. எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும்?'' என்று கேட்டார். அப்போது அவையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. முதல்வர் ஜெயலலிதாவும் அருண்பாண்டியனின் கேள்விக்கு புன்னகைத்தார்.
அருண் பாண்டியன் உள்ளிட்ட 8 தேமுதிக எம்எல்ஏக்கள், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால், சட்டசபையில் இவர்கள் தேமுதிக உறுப்பினர்களாகவே கருதப்பட்டு வருகின்றனர். இதை வைத்துதான், அருண் பாண்டியன் எங்களது பிராண்ட் எப்போது மாற்றப்படும் என கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications