தூத்துக்குடி அருகே மின்னல் தாக்கி ஆடு மேய்த்தவர் பலி.. 14 ஆடுகளும் பலியான பரிதாபம்
கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 ஆடுகளும் பலியாகின.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 14 ஆடுகளும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கணபதி பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். நேற்று மாலை கணபதிபட்டி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மாரியப்பன், அவர் மேய்க்கச் சென்ற 14 ஆடுகளும் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இது பற்றி அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.