ஜெ.வைப் போல சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் இபிஎஸ் - ஒபிஎஸ்: அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போல, இபிஎஸ் - ஒபிஎஸ் சட்டம் ஒழுங்கை பராமரிக்கின்றனர் என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.
கோவில்பட்டி: மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவைப் போல, தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரித்து வருகின்றனர் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டியுள்ளார்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று சனிக்கிழமை கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மீனவர்கள் தற்போது கடலில் மீன்பிடிக்கச் செல்ல 15 அடி நீளமும், 150 எச்.பி. திறனும் கொண்ட விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்டுவருகிறது. ஆனால், மீனவர்கள் 24 அடி நீளமும், 240 எச்.பி. திறனும் கொண்ட பெரிய விசைப்படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரிய விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க அனுமதித்து உடனடியாக உத்தரவிட்டார்" என்று கூறினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ "மறைந்த முதல்வர் ஜெயலலிதா எப்படி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாத்தாரோ, அதேபோல தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வமும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரித்து வருகின்றனர்" என்று கூறினார்.
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கடம்பூர் ராஜூ "தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 23,000 போராட்டங்கள் நடைபெற்று உள்ளன. ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. அது மக்களின் உணர்வு பிரச்சினை. அதே போல, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 99 நாட்கள் நடந்த போராட்டத்துக்கு தமிழக அரசு தடை விதிக்கவில்லை. 43 நாட்கள் முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க மறுத்து, அதனை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது.
திமுக ஆட்சி காலத்தில் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போதுதான், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்கப்பட்டு, 240 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய அந்த நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.