சென்னை போலவே திண்டுக்கல் முதியோர் இல்லத்திலும் சிமெண்ட் கல்லறை அடுக்குகள்... திடுக்கிட்ட அதிகாரிகள்!
சென்னை உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் இருந்தது போலவே திண்டுக்கல் முதியோர் இல்லத்திலும் சிமெண்ட் கல்லறைகள் இருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Recommended Video
திண்டுக்கல் : உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் இருந்தது போலவே திண்டுக்கல் முதியோர் இல்லத்திலும் சிமெண்ட் கல்லறைகள் இருந்தது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிருந்த சவப்பெட்டிகளை உடைத்து பார்த்த போது அதில் இறந்தவர்களின் உடல்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த பாலேஸ்வரம் முதியோர் இல்லத்தில் இறந்தவர்களின் எலும்புகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 3 நாட்களாக அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி சுமார் 300 முதியோர்களை வேறு ஆதரவற்ற இல்லங்களுக்கு இடம்மாற்றம் செய்துள்ளனர்.
தங்களை சரியாக பராமரிக்கவில்லை என்றும் இல்லத்தை விட்டு வெளியேற நினைப்பவர்களை வெளியேற விடாமல் அடைத்து வைத்திருப்பதாகவும் பலர் தெரிவித்தனர். நாள் ஒன்றிற்கு சராசரியாக ஒருவராவது இறப்பது வாடிக்கையான விஷயம் என்றும் அவ்வாறு இறப்பவர்கள் முதியோர் இல்லத்தில் உள்ள சிமெண்ட் கல்லறைகளில் வைத்து மூடப்பட்டு விடுவதாகவும், உடல்கள் அழுகிய பின்னர் எலும்புகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல்லில் அதிகாரிகள் சோதனை
செயின்ட் ஜோசப் ஆதரவற்றோர் இல்லம் சென்னை மட்டுமின்றி வேலூர், திண்டுக்கல்லிலும் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் தான் முதன்முதலில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த முதியோர் இல்லமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை முதியார் இல்லத்தில் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து திண்டுக்கல் கொடைரோட்டில் உள்ள செயின்ட் ஜோசப் முதியோர் இல்லத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.
230 பேரிடம் விசாரணை
இந்த முதியோர் இல்லத்தில் சுமார் 230 பேர் உள்ளனர். இவர்களின் உடல்நிலை, வழங்கப்படும் உணவு மற்றும் மருந்துவ வசதிகள் குறித்து மாவட்ட சமூக நல அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.
ஆட்சியரிடம் அறிக்கை
ஆதரவற்ற இல்லத்தில் தங்கியுள்ள பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவே அதிகாரியிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட உள்ளன.
திண்டுக்கலிலும் அதே கல்லறைகள்
ஆய்வின் போது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்த விஷயம் பாலேஸ்வரம் இல்லத்தில் இருந்தது போலவே 14 அடுத்தடுத்த நெருக்கமான சிமெண்ட் கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை உடைத்து பார்த்த அதிகாரிகள் அதிர்ந்து போயுள்ளனர், கல்லறைகளுக்குள் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்துள்ளன. 6 மாதத்தில் முதியோர் இல்லத்தில் உயிரிழந்தவர்களின் விவரத்தை அதிகாரிகள் முதியோர் இல்ல நிர்வாகிகளிடம் கோரியுள்ளனர்.