"கபாலி"க்கு தடை கோரி வழக்கு- விளக்கம் அளிக்க ரஜினிக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: 'லிங்கா' படத்துக்கு நஷ்டஈடு வழங்காமல் 'கபாலி' படத்தை வெளியிடக் கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'கபாலி' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா உலகினரும் இப்படத்தைப் பார்க்க காத்துக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் 'லிங்கா' படத்தின் நஷ்டத்தை ஈடு செய்யாமல் 'கபாலி' படத்தை வெளியிடக் கூடாது என இப்படத்தை வெளியிடத் தடைகோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கோவை நகர விநியோகஸ்தர் சுக்ரா பிலிம்ஸ் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் ரஜினி, தாணு உட்பட 7 பேரிடம் விளக்கம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லிங்கா படத்துக்கு ஏற்கெனவே ரஜினி மற்றும் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் சார்பில் நஷ்ட ஈடு வழங்கப்பட்டு சமரசமாகிவிட்டதாக ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், கபாலி வெளியாக 2 நாட்கள் இருக்கும்போது வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.