லிங்கா படத்தின் முழுக் கதையையும் சமர்பிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு
மதுரை: லிங்கா படத்தின் கதையை வருகிற 14 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று படக்குழுவுக்கு மதுரை மதுரை முதலாவது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
லிங்கா திரைப்படம் தொடர்பான கதைத் திருட்டு வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது லிங்கா திரைப்படக் குழுத் தரப்பில் படத்தின் கதையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த மனு நீதிபதி விஸ்வநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், லிங்கா திரைப்படக் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோரிடம் கையெழுத்துப் பெற வேண்டி உள்ளது.
அவர்கள், தற்போது படப்பிடிப்பு தொடர்பாக வெளியூர்களில் இருப்பதால் கையெழுத்துப் பெற முடியவில்லை. எனவே, கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினி தரப்பு வழக்கறிஞர் எம்.பி.செந்தில், ''வழக்கு விசாரணையின் போது தேவைப்பட்டால் லிங்கா கதையை ஒப்படைக்க தயார்,'' என்றார்.
இதையடுத்து எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ''முல்லை வனம் 999' கதையுடன், லிங்கா கதையை ஒப்பிட்டு பார்த்தால் தான் உண்மை தெரியும். எனவே இப்போதே கதையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்,'' என்றார். இருதரப்பு விவாதங்களை கேட்ட நீதிபதி விஸ்வநாதன் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, நேற்றைய விசாரணையின் போது, வருகிற 14-ம் தேதிக்குள் லிங்கா படத்தின் 'திரைக்கதை நகலை' நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என படக்குழுவுக்கு நீதிபதி விஸ்வநாதன் உத்தரவிட்டார்.