லிங்கா தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தும் படம் இல்லையாம்..!- விநியோகஸ்தரின் கண்டுபிடிப்பு!
சென்னை: "லிங்கா' படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு பெற்று அரசுக்கு ரூ.21 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லிங்கா விநியோகஸ்தர் ஒருவர் தாக்கல் செய்த மனு விவரம்:
"மெரீனா பிக்சர்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரராக நான் உள்ளேன். நடிகர் ரஜினிகாந்த் நடித்த "லிங்கா' படத்தை திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் விநியோகம் செய்வதற்கும் உரிமம் பெற்றேன்.
பட உரிமம் வழங்கியபோது, படம் தோல்விடையந்தால் அதை ஈடு செய்கிறோம் என தயாரிப்பு தரப்பில் உறுதி அளித்திருந்தனர். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.
கடந்த ஜனவரி மாதம் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, "லிங்கா' படத்தின் மூலம் தனக்கு லாபம் கிடைத்தாக படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தெரிவித்தார்.
மேலும் "லிங்கா' படத்துக்கு தமிழக அரசின் கேளிக்கை வரி விலக்கு பெறப்பட்டுள்ளது. கேளிக்கை வரி விலக்கு அளிக்க அந்தப் படத்தின் பெயர் தமிழில் இருக்க வேண்டும்; தமிழ் கலாசாரத்தை வளர்க்கும் விதமாகவும் இருக்க வேண்டும்.
ஆனால், "லிங்கா' என்பது தமிழ்ப் பெயர் இல்லை. இது சம்ஸ்கிருத வார்த்தையாகும்.
படத்தின் கதை அமைப்பு தமிழ்க் கலாச்சாரத்தை மேம்படுத்தும் வகையில் இல்லை (?!). இந்த கேளிக்கை வரி விலக்கு மூலம் தமிழக அரசுக்கு ரூ. 21 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கடந்த 3-ஆம் தேதி சென்னை மாநகர போலீஸ் ஆணையரிடம் புகார் அளித்தேன். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, நான் அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனுவை ஒருமுறை படித்தாலே, அது எத்தனை பெரிய அபத்தம் மற்றும் திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம் என்பது தெரிகிறது என்கிறது லிங்கா தரப்பு.
திட்டமிட்ட பிரச்சாரம்
லிங்கா படம் வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருந்த மூன்றாவது நாளே, அந்தப் படத்துக்கு எதிராக நன்கு திட்டமிடப்பட்ட பிரச்சாரத்தை விநியோகஸ்தர்கள் என்ற பெயரில் சிலர் மேற்கொண்டனர். இவர்களின் நோக்கம் படம் நஷ்டம், அதற்கு ஈட்டுத் தொகை வேண்டும் என்பதல்ல.. ரஜினியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பது, படத்தை ஓட விடாமல் தடுப்பது மட்டும்தான் என்று ரசிகர்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
ரஜினிக்கு எதிராக
அதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து ரஜினியைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர் சிலர். இதற்காக பெரும் தொகையையும் செலவழித்து வருகின்றனர். 'இது ரஜினிக்கு எதிரான உண்மையான ப்ளாக் மெயில்' என விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கண்டிருத்திருந்தன. உண்மையில் படம் நஷ்டம் என்றால், அதைப் பிரச்சாரம் செய்ய இவ்வளவு பணம் செலவழிப்பது ஏன்? என்ற மீடியா எழுப்பிய கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை.
பிச்சை
பிச்சையெக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருந்தவர்கள், இப்போது நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள். ரஜினியின் தொடர்ச்சியான மவுனம் இவர்களை இஷ்டத்துக்குப் பேச வைக்கிறது என ரசிகர்கள் கொந்தளிக்கிறார்கள்.
அமைதியாக
ஆனால் இன்னொரு பக்கம், லிங்காவையும் ரஜினியையும் தாக்கிப் பேசி வரும் இந்த விநியோகஸ்தர்களின் பின்னணி என்ன? யாருக்காக அவர்கள் இந்த வேலையைப் பார்க்கிறார்கள்? யாருக்கு நெருக்கமானவர்கள் இவர்கள்? என்பதை அவர்களாவே வெளிப்படுத்திக் கொள்ளட்டும் என்பதற்காகவே ரஜினி தரப்பு அமைதியாக வேடிக்கைப் பார்ப்பதாகக் கூறப்படுகிறது.
இதுவா தோல்விப் படம்?
லிங்கா படத்தால் நஷ்டம் என்று கூறிக் கொண்டிருந்த இதே நபர், இப்போது படத்துக்கு ரூ 21 கோடி வரி கட்ட வேண்டும் என்கிறார். அதாவது கேளிக்கை வரி என்பது படத்தின் வியாபாரத்திலிருந்து செலுத்தப்படுவதல்ல. திரையரங்க வசூலிலிருந்து கட்டப்படுவது மட்டுமே. அப்படிப் பார்த்தால் படத்தின் வசூலில் 21 கோடி வரி என்றால், அந்தப் படம் தமிழகத்தில் வசூலித்தது எத்தனை கோடிகள் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம். ரூ 21 கோடியை வரியாகக் கட்டும் அளவுக்கு வசூலைக் குவித்த படம் வெற்றிப் படமா.. தோல்விப் படமா என்பது மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்!
தமிழ் கலாச்சாரத்தை மேம்படுத்தவில்லையா?
லிங்கா படம் கிளீன் யு சான்று பெற்ற படம். படத்தில் ஆபாச, வன்முறை, விரச காட்சிகள் துளியும் இல்லை. குழந்தைகளுடன் தைரியமாகப் பார்க்கத் தக்க படம் என பாராட்டுகளைப் பெற்றிருந்தது. படத்தின் பல காட்சிகள் இந்தியரின், தமிழரின் பெருமையை எடுத்துக் கூறின.
கல்லணை, கொடிவேரி அணையின் பெருமைகள்
கல்லணையை உதாரணம் காட்டி கரிகால சோழனின் பெருமையையும், கோவை மாவட்டத்தில் உள்ள கொடிவேரி அணையைக் குறிப்பிட்டு தமிழனின் அணைக் கட்டும் திறனையும் ரஜினியின் குரலில் அழுத்தமாகக் கூறியிருந்தது படம் பார்த்தவர்களுக்கு நினைவிருக்கலாம். இதற்காக தமிழக விவசாயிகள் சார்பில் ரஜினிக்கு பாராட்டு தெரிவித்து போஸ்டர்கள் அடித்தது நினைவிருக்கலாம்.
ரஜினியை எதற்காக இழுக்க வேண்டும்?
இந்தப் படத்தின் கேளிக்கை வரி விலக்குக்கும் ரஜினிக்கும் என்ன சம்பந்தம்? அவர் செல்வாக்கை உபயோகப்படுத்திவிட்டாராம். இதைவிட பெரிய அபத்தம் இருக்குமா? என திருப்பிக் கேட்கிறார்கள். தமிழக சென்சாரை அவமதிக்கும் செயல் இது. சென்சார் போர்டு நியாயமாக இதற்காக வழக்குத் தொடர வேண்டும். காரணம், லிங்கா சமயத்திலேயே வந்த எத்தனையோ பெரிய படங்களைப் பார்த்து, அவற்றுக்கு யுஏ சான்று கொடுத்தவர்கள் சென்னை மண்டல தணிக்கை அதிகாரிகள். உதாரணம் ஐ, என்னை அறிந்தால். இவற்றுக்கு யு சான்று வர கடைசி வரை போராடிப் பார்த்து, கடைசியில் முடியாமல், யுஏ சான்றுடன்தான் வெளியிட்டனர் தயாரிப்பாளர்கள்.
எதிர்ப்பாளர்களின் உண்மை முகம்
இவர்களிடம் ரஜினி தன் செல்வாக்கைக் காட்டி யு சான்று பெற்றதாகக் கூறுவது அவர்களை அவமதிப்பதற்கு சமமாகாதா? இதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று இப்போது கேள்வி எழுந்துள்ளது. இந்த வழக்கு லிங்கா எதிர்ப்பாளர்களின் உண்மை முகம் என்னவென்பதைக் காட்டும் இன்னொரு அழுத்தமான ஆதாரம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்!