நோ பழங்கள்.. சுற்றுலாப் பயணிகளிடம் கையேந்தும் சிங்கவால் குரங்குகளின் பரிதாப நிலை!
உணவுப் பற்றாக்குறையால் பாபநாசம் அருவி பகுதியில் சிங்கவால் குரங்குகள் சுற்றுலாப் பயணிகளிடன் கையேந்தி திரிகின்றன.
நெல்லை: அரியவகை குரங்கு வகைகளில் ஒன்றான சிங்கவால் குரங்குகளின் நடமாட்டம் நெல்லை அகஸ்தியர் அருவி பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது. பெரும்பாலும் உயிரியல் பூங்காக்களில் மட்டுமே பார்த்த இவ்வகைக் குரங்குகளை, மிக அருகில் பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்கின்றனர்.
குரங்கு வகைகளில் சிங்கத்தின் முகத்தோற்றம் கொண்ட லங்கூர் வகையைச் சேர்ந்தவை சிங்கவால் குரங்குகள் என அழைக்கப்படுகின்றன. மேற்குதொடர்ச்சி மலையில், நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு, திருக்குறுங்குடி, முண்டந்துறை, பாபநாசம் உள்ளிட்ட வனப்பகுதியில் நாட்டு குரங்கு, கருமந்தி என்ற கருங்குரங்கு, சிங்கவால் குரங்கு, அனுமன் மந்தி என்ற அனுமன் குரங்கு, ராணுவ குரங்கு ஆகிய குரங்கு இனங்கள் வசிக்கின்றன.
இதில், அனுமன் குரங்கு மற்ற குரங்கு இனங்களில் இருந்து வேறுபட்டு காணப்படும். உருவத்தில் மற்ற குரங்குகளை விட பெரியதாக இருந்தாலும், பயந்த சுபாவம் கொண்டவை இவை. மற்ற குரங்குகள் பொதுவாக வாலை மடக்கி வைத்துக் கொண்டு நடமாடும். ஆனால், இந்த வகை குரங்குகள் வாலை தூக்கி வைத்துக் கொண்டு நடமாடுபவை.
கையேந்தும் நிலை:
பெரும்பாலும் வனத்தின் மையப்பகுதியில் வாழும் இந்தவகைக் குரங்குகள், பழம், காய்கறிகளை விரும்பி உண்ணும். ஆனால், காலத்தின் கோலத்தால் தற்போது இவையும் மனிதரிடம் கையேந்தும் நிலைக்கு வந்துவிட்டன.
அகஸ்தியர் அருவி:
மற்ற குரங்கு இனத்தைக் கண்டால் விலகிச் செல்லக் கூடிய இந்தவகைக் குரங்குகள், மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் குணம் கொண்டவை. எனவே, சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும், நெல்லை மாவட்டம், பாபநாசம் மேலே உள்ள களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள அகஸ்தியர் அருவிப் பகுதியில் இக்குரங்குகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.
குப்பைகளில் இருந்து...
சுற்றுலாப் பயணிகள் தரும் உணவுகளை இவை சாப்பிடுகின்றன. சமயங்களில் குப்பைகளில் கிடக்கும் உணவுகளையும் பொறுக்கித் தின்கின்றன. சமயங்களில் சுற்றுலாப் பயணிகளின் கைகளில் உள்ள உணவுகளை உரிமையுடன் பிடுங்கியும் சாப்பிடுகின்றன.
கவலை:
ஆர்வமாக இவ்வகைக் குரங்குகளைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் தங்களிடம் உள்ள பிஸ்கெட் போன்ற உணவுப் பொருட்களை அவற்றிற்குச் சாப்பிடத் தருகின்றன. ஆனால், பழங்கள், காய்கறிகளை மட்டுமே சாப்பிடுபவை இந்தவகைக் குரங்குகள். உணவுப் பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகள் தரும் உணவுகளைச் சாப்பிடும் இவற்றிற்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவதாக வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
|
பழ மரங்கள் தேவை:
அதோடு சமயங்களில் இந்த குரங்குகள் வாகனங்களில் சிக்கி விபத்தில் காயமடைகின்றன. எனவே, சிங்கவால் குரங்குகளைப் பாதுகாக்க வனப்பகுதியில் அதிகளவில் பழ மரங்களை நடவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.