மலைக்க வைக்கும் அளவுக்கு சொத்துகளை வாங்கி குவித்து கடனாளியாக தப்பி ஓடிய மல்லையா!
இந்தியாவில் ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்தும் கடைசியில் வங்கி கடன்களை கட்ட முடியாமல் நாட்டைவிட்டே தப்பி ஓடி தற்போது சிக்கியிருக்கிறார் விஜய் மல்லையா.
சென்னை: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான விஜய் மல்லையா மலைக்க வைக்கும் வகையில் ஏராளமான சொத்துகளை வாங்கினாலும் கடன்களை கட்ட முடியாமல் நாட்டைவிட்டே தப்பி ஓடி தற்போது சிக்கியிருக்கிறார்.
ஆடம்பர வாழ்க்கை, மதுபான வியாபாரம் என இந்திய பில்லியனர்கள் பட்டியலில் செழிப்பாக இருந்தவர் விஜய் மல்லையா. இந்தியாவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பி சென்று அங்கிருந்து சட்டத்தை கேலி செய்து வந்தார்.
கோடிக்கணக்கில் கடன் கொடுத்ததால் வங்கிகளுக்கு பாதிப்பு, இவரது நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததால் ஊழியர்களுக்கு பாதிப்பு, மல்லையா தயாரிக்கும் மதுபானத்தைக் குடித்ததால் இந்தியாவில் இருக்கும் கடைக்கோடி மக்களுக்கு உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பு என இவரால் பாதிக்கப்படாதது யாருமே இல்லை. இப்படி இவரைப் பற்றிப் பல "பெருமைகள்" உண்டு.
துவக்கம்.. உயர்வு..
விஜய் மல்லையாவின் தந்தை 1983ஆம் ஆண்டு காலமான பிறகு தனது 28வது வயதில் யுபி குரூப் நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார் விஜய் மல்லையா. கிங்பிஷர் ஸ்டாரங் பீர் அறிமுகம்தான் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இன்று வரை இந்தியாவில் அதிகளவில் விற்கப்படும் பீர் வகை என்றால் அது இதுவே. 2002ஆம் ஆண்டு ராஜ்யசபா எம்.பியாகவும் ஆனார் மல்லையா.
இந்தியாவில் இருக்கும் சொத்துக்கள்
எப்போதும் ஜாலியாக பெண்கள் புடைசூழு கிளுகிளு போட்டோக்களை போட்டு 'வாழ்றான்யா மனுஷன்' என்று அனைவரும் சொல்ல வைக்கும் விஜய் மல்லையாவிற்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. யுனைடெட் பிரீவரிஸ் நிறுவனத்தின் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 33% பங்குகள், மங்களூரு கெமிக்கல் மற்றும் உரம் நிறுவனத்தில் 140 கோடி ரூபாய் மதிப்பிலான 22 சதவீத பங்குகள், யுபி ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் 52 சதவீத பங்குகள், பேயர் கார்ப் சயன்ஸ் நிறுவனத்தில் 1 சதவீத பங்குகள் மல்லையா வசம். ஆனால் இந்த சொத்துக்களில் 50 சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை இவர் கோர முடியாத நிலையில் உள்ளவை.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் துவக்கம்
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை 2005ம் ஆண்டு பிரம்மாண்டமாக அறிமுகம் செய்த விஜய் மல்லையா, ராயல் சேலேஞ் பிராண்ட் விஸ்கியை தயாரிக்கும் ஷா வாலேஸ் நிறுவனத்தைக் கைப்பற்றினார். இத்தோடு ஆசைவிடவில்லை மகிழ்ச்சி மன்னனுக்கு... 2006ம் ஆண்டில் பேக்பைபர் விஸ்கி மற்றும் ரமனாவ் வோட்கா தயாரிக்கும் நிறுவனத்தைக் கைப்பற்றினார், நான் கால்வைக்காத துறையே இருக்கக் கூடாது என்ற மமதை மல்லையாவிற்கு உண்டு. இதனாலேயே 2007ம் ஆண்டில் ஸ்பைகர் என்னும் பார்மூலா ஒன் கார் நிறுவனத்தை வாங்கி ஃபோர்ஸ் இந்தியா எனப் பெயர் மாற்றினார்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஓனர்
ஏர் டெக்கான் அதிக நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டு இருந்து. அந்த நிறுவனத்தை வாங்கினார் விஜய் மல்லையா. வைட்டி அண்ட் மெக்கே என்னும் பிரிட்டிஷ் விஸ்கி நிறுவனத்தை 595 மில்லியன் டாலருக்குக் கைப்பற்றினார். 2008ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் பிரபலமடைந்து வந்த காலகட்டத்தில் 111.6 மில்லியன் டாலர் மதிப்பில் பெங்களூரு ராயல் சேலேஞ்சர்ஸ் கிரிக்கெட் அணியை வாங்கினார் மல்லையா. பிரம்மாண்டத்தால் மக்களை வாயடைக்கச் செய்யும் மல்லையா 2009ம் ஆண்டு இந்திய மக்கள் அனைவரும் வாயைப் பிளக்கும் வகையில் மாண்டி கார்லோவில் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள தீவு ஒன்றை வாங்கி அசத்தினார்.
வெளிநாட்டுச் சொத்துக்கள்
நியூயார்க் டிரம்ப் டவரில் வீடுகள், சான் பிரான்சிஸ்கோவில் ஆடம்பர வீடு, தென் ஆப்பிரிக்காவில் கேம் ரெசார்ட், கோவா-வில் பிச்பிரென்ட் வில்லா 200க்கும் மேற்பட்ட ஆடம்பர பழமையான வின்டேஜ் கார்கள், 95 மீட்டர் நீளம் உள்ள ஆடம்பர படகு, கல்ப்ஸ்டீரிம் என்னும் ஆடம்பர பிரைவேட் ஜெட் என இவரது சொத்துக்கள் நீண்டுகொண்டே போகிறது. ஆனால் ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க மட்டும் பணம் இல்லை.
சிறகொடிந்த கிங்பிஷர் ஏர்லையன்ஸ்
கடன் சுமையின் காரணமாகக் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் நிறுவன ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு கடந்த 2008ம் ஆண்டு விஜய் மல்லையா தள்ளப்பட்டார். சம்பள நிலுவையின் காரணமாக இந்நிறுவன ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கினர். இதனால் இந்நிறுவனத்தின் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் காணாமலே போனது.
நாணயமற்ற மல்லையா
கிங்பிஷர் நிறுவனத்திற்காகப் பெற்ற கடனை அளிக்க முடியாத விஜய் மல்லையாவை கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக யுனைடெட் வங்கி "நாணயமற்றவர்" என அறிவித்தது. இதேபோல் மேலும் பல வங்கிகள் அறிவித்தன. இதனை வழக்குகள் மூலம் சமாளித்தார் மிஸ்டர். மல்லையா. ஆனாலும் ரூ9,000 கோடி கடன்கள் இன்னும் நிலுவையில் உள்ளன. இதனை கட்ட முடியாது என கூறிவிட்டு நாட்டை விட்டே தப்பி ஓடி தலைமறைவானார் மல்லையா. இப்போது இங்கிலாந்தில் வசமாக சிக்கியுள்ளார்.