சிதம்பரம் வாகன சோதனையில் 2,060 மது பாட்டில்கள் பறிமுதல் - புதுச்சேரியில் இருந்து கடத்தல்
சிதம்பரம்: தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி நடைபெற்று வருகின்ற தீவிர வாகன சோதனையில் சிதம்பரம் அருகே கிட்டதட்ட 2,000 மது பாட்டில்கள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பீர்பாஷா மற்றும் போலீசார் காட்டுமன்னார்கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி காரையும், 2 பைக்குகளையும் நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மது பாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வில்வகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு, புதுச்சேரியில் இருந்து இந்த மது பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து 43 பெட்டிகளில் இருந்து 2 ஆயிரத்து 60 மது பாட்டில்களை கைப்பற்றிய போலீசார், மது பாட்டில்களை கடத்த பயன்படுத்திய ஆம்னி கார் மற்றும் 2 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக புதுச்சேரியைச் சேர்ந்த கதிரவன், செல்வம், கடலூரைச் சேர்ந்த ரமேஷ், கூத்தப்பாக்கத்தைச் சேர்ந்த முரளி ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.