"குடிமகன்களுக்கு" ஒரு "பேட்" நியூஸ்... தமிழகத்தில் மதுபானங்களின் விலை கிடுகிடு உயர்வு!
தமிழகத்தில் மதுபானங்களின் விலையை உயர்த்த அமைச்சரவை கூட்டம் முடிவு செய்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மதுபானங்களின் விலையை ரூ10 முதல் ரூ12 வரை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை ஏற்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 20 சதவீதம் வரை உயருகிது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டதால் தமிழக அரசுக்கு வருமானம் குறைந்தது. இதனால் வருவாயை பெருக்குவதற்காக மதுபானங்களின் விலையை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அதன்படி பீர் பாட்டிலின் விலை ஒன்றுக்கு ரூ.10-ம், குவார்ட்டரின் விலை ரூ.12-ம் அதிகரிக்கப்படவுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.