பாரில் மதுவிற்பனை... டாஸ்மாக் ஊழியர்கள் குமுறல்- அதிமுக நிர்வாகி உள்பட ஐவர் கைது
நெல்லை: பாளையங்கோட்டையில் மதுபான பார்களை காலை நேரத்தில் முன்கூட்டியே திறந்து, அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக அ.தி.மு.க. வட்டார செயலாளர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைகளை விட பார்களில் மதுபானங்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக டாஸ்மாக் கடை ஊழியர்கள் குமுறி வந்த நிலையில் போலீசார் பார்களில் சோதனை நடத்தி மதுவிற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் 6798 மதுக்கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டி தருவதில் டாஸ்மாக் நிறுவனம் பெரும் பங்கு வகித்து வருகிறது.
நெல்லை மண்டலத்தில் டாஸ்மாக் மூலம் 227 மதுக்கடைகள் நடத்தப்படுகின்றன. இந்த கடைகளில் 9 வகையான பீர், 140 வகையான பிராந்தி, விஸ்கி மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.
டாஸ்மாக் கடையை ஓட்டி தனியாருக்கு ஏலம் மூலம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் எம்சி, விஎஸ்ஏபி, ஹனிபீ, ஜானெக்ஷா, ஓல்டு மங், கோல்டன் ஈகிள் உள்பட சரக்குகளை பலர் விரும்பி வாங்குவர். ஆனால் இந்த சரக்குகள் பல மாதஙகளாக கிடைக்கவில்லை.
இவற்றுக்கு பதில் லமார்ட்டின், எல்கான்சா, கோல்ட் வாட், ரோமன்கோனடில், செவாலியர், கிங்க்பிஷர் வகை பீர்களை குடிமகன்கள் விரும்பி குடிப்பர். ஆனால் தற்போது கோல்ட் 5 ஆயிரம், 10 ஆயிரம், பிரிட்டிஸ் எம்பயர் உள்ளிட்ட பீர் வகைகள் தான் டாஸ்மாக் கடைகளில் கிடைக்கின்றன.
பார்களில் விற்பனை
குளிர்சாதன பெட்டிகளில் வைத்து இவற்றை விற்பனை செய்ய வேண்டும். ஆனால் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்திருக்கும் பார்களில் குளிர்சாதன பெட்டிகள் வைத்து பீர் வகைகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்கின்றனர்.
டாஸ்மாக்கில் சரிவு
பார்களில் மது விற்பனை செய்யக்கூடாது என்பதை மீறி பீர் வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் சில பார்களில் சில்லறை விற்பனையும் களை கட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கலால் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் வருமானம் பாதிக்கிறது என்பது டாஸ்மாக் கடை ஊழியர்களின் குமுறலாகும்.
முன்கூட்டியே விற்பனை
டாஸ்மாக் கடைகள், அதையொட்டி உள்ள மதுபான பார்களை காலை 10 மணிக்குத்தான் திறந்து மதுவிற்பனை செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. இந்தநிலையில் பாளையங்கோட்டை சமாதானபுரம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள ஒரு சில பார்களில் காலையில் முன்கூட்டியே திறந்து, மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
பார்களில் சோதனை
இந்த நிலையில் சனிக்கிழமையன்று காலை 9.15 மணி அளவில், மனக்காவலம் பிள்ளை மருத்துவமனைரோடு பகுதியில் உள்ள ஒரு பாரை முன்கூட்டியே திறந்து, மது விற்பனை செய்வதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் போலீசார் சமாதானபுரம், மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் திடீர் சோதனை செய்தனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
2 மதுபார்களில், முறைகேடாக மது விற்பனை செய்து கொண்டு இருந்ததாக மேலப்பாட்டத்தைச் சேர்ந்த ரவி (வயது 51), செல்லத்துரை (50), வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் (42), செந்தில் நகரைச் சேர்ந்த மாரியப்பன் (40). பார் உரிமையாளர் பாலமுருகன் (48) ஆகிய 5 பேரை பிடித்து போலீசார் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 23 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட பாலமுருகன் 21வது வட்ட அ.தி.மு.க. செயலாளராக உள்ளார்.
5 பேர் கைது
போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தகவல் அறிந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் போலீஸ் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையில் டி.ஐ.ஜி. முருகன் உத்தரவின் பேரில் அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்