தீயாய் வேலை செய்யும் ஸ்ரீரங்கம் ‘குடிமகன்கள்’... பிப்ரவரியில் மட்டும் 2% கூடுதலாக குடித்து சாதனை!
சென்னை: இடைத் தேர்தல் நடைபெறவுள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மது விற்பனை இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளதாம்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வரும், 13ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதிமுக வேட்பாளராக வளர்மதியும், திமுக வேட்பாளராக ஆனந்தனும், பாஜக வேட்பாளராக சுப்ரமணியனும், மார்க்சிஸ்ட் வேட்பாளராக அண்ணாதுரையும் களமிறங்கியுள்ளனர்.
தேர்தல் அறிவிப்பு வெளியான பின் தமிழகமே கவனிக்கும் நகரமாக மாறியுள்ளது ஸ்ரீரங்கம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் பிரபலங்களில் பெரும்பாலானோர் அங்கு தான் முகாமிட்டுள்ளனர்.
ஹவுஸ்புல்...
ஸ்ரீரங்கத்தில் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே புக் செய்யப் பட்டு விட்டன.
சூடு பறக்கும் வியாபாரம்...
வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகரித்துள்ளதால், அங்குள்ள ஹோட்டல்கள், டீக்கடைகள், மளிகைக் கடைகள், கூல்டிரிங்ஸ் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறதாம். வழக்கமான விற்பனையை விட 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக அங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.
தினசரி வர்த்தகம்...
இது தொடர்பாக திருச்சியை மையமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு வியாபாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர் கோவிந்தராஜுலு நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘திருச்சி மாவட்டத்தின் தினசரி வர்த்தகம் 70 கோடி ரூபாய்.
கூடுதல் வர்த்தகம்...
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலால் கடந்த சில நாட்களாக 15 கோடி ரூபாய் வரை அதிகரித்து, 85 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும், 7 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடக்கும். தற்போது, 11 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடக்கிறது.
ஹேப்பி அண்ணாச்சி...
சிறு சிறு கடைகளில் கூட, 40 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதால், அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாங்கும் திறன் அதிகரிப்பு...
பலசரக்கு கடைகள் மட்டுமின்றி, ஸ்ரீரங்கத்தில் நகை விற்பனையும் 10 சதவீதம் கூடியுள்ளதாகக் கூறப்படுகிறது.ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலால், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளதையே, வர்த்தக பெருக்கம் காட்டுவதாக பொருளாதாரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
மது விற்பனை...
அத்தி பூத்தாற் போல மற்ற வியாபாரங்களே உயர்ந்துள்ள நிலையில், எப்போதும் உச்சத்தில் இருக்கும் டாஸ்மாக் வருவாய் மேலும் கூடாமல் இருக்குமா. திருச்சியில் உள்ள 229 டாஸ்மாக் கடைகளில் நாள்தோறும் மது வகைகள் (ஐ.எம்.எப்.,) 6,500, பீர் 3,500 என, மொத்தம், 10 ஆயிரம் பெட்டிகள் விற்பனையாகும்.
சாதா நாள்லயே...
இதன் சராசரி மதிப்பு 2.50 கோடி ரூபாய். விடுமுறை நாட்களில் மூன்று கோடி ரூபாய் விற்பனை நடக்கும்.
விற்பனை உயர்வு...
இந்நிலையில், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலால் திருச்சி முழுவதும் உள்ள கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இரண்டு வாரங்களாக நாள்தோறும் 4 - 5 கோடி ரூபாய்க்கும், வார இறுதியில், ஆறு கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகிறதாம்.
சரக்குகள் இருப்பு...
இன்னும் 14 நாட்களுக்கு தேவையான சரக்குகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எக்கட்சி ஜெயித்தாலும் அது பயன்படும் என கணக்குப் போடப்பட்டுள்ளதாம்.
விசாரணை நடத்த உத்தரவு...
ஸ்ரீரங்கத்தில் மது விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனாவும் உறுதி செய்துள்ளார். மேலும் தேர்தல் நேரம் என்பதால், இது தொடர்பாக விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளாராம்.