உயரே பறந்து மறைந்த மழைக்குருவி.. ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய மாயம் இதுவோ!
சென்னை: செக்க சிவந்த வானம் படத்திற்காக ஏர்.ரஹ்மான் ''பெற்றுக்'' கொடுத்து இருக்கும் இசை இசையுலகில் மிக முக்கியமான ஒன்று.
நம்மை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களுக்கு பின்பும் எதோ ஒன்று இருக்கும் என்பார்கள். ஒரு விஷயத்தை கூர்ந்து கவனித்தால் அதற்கு பின் நிறைய விஷயங்கள் இருக்கும் என்பார்கள். வாழ்க்கை உண்மையிலேயே அப்படியா என்று தெரியவில்லை, ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானின் செக்க சிவந்த வானம் (சிசிவி) பின்னணி இசை (பிஜிஎம்) அப்படித்தான்!
ஒரு படம் .. மணிரத்னம் இயக்குகிறார்... விஜய்சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, பிராகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா, அதீதி என்று கோலிவுட்டின் முக்கியமான நடிகர்கள் எல்லோரும் நடிக்கிறார்கள். இதற்கு ஒரு பிஜிஎம் வேண்டும் என்றால் எல்லோரும் ''மாஸாக'' ஒரு பிஜிஎம் கொடுத்துவிடலாம் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்தது வேறு ஒரு இசை.. வேறு ஒரு மழை.. வேறு ஒரு தவம். இந்த படத்தில் எத்தனை பிஜிஎம்கள் இருக்கிறது என்று சரியாக கண்டுபிடித்துவிட்டால் நீங்களும் இசைஞானிதான்.
பல பிஜிஎம்
ஆம் இந்த படத்தில் ஒரு பிஜிஎம் கிடையாது.. இது நிறைய ஸ்ட்ரிங், மெட்டல் பிஜிஎம்களின் தொகுப்பு. எப்போது எங்கு எந்த இசைக்கோர்வையை ரஹ்மான் தூவி வைத்து இருக்கிறார் என்று படத்தின் மொத்த பிஜிஎம்மை தனியாக டவுன்லோடிட்டு பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும். எல்லா பாடலின் பின்னணி இசையையும் படம் நெடுக பிஜிஎம்மாக பயன்படுத்தி உள்ளார்.
பறந்த மழைக்குருவி
படம் ரிலீஸ் ஆவதற்கு முன் யூ டியூபில் மழைக்குருவியும், பூமியும்தான் முதலில் வந்தது. இந்த வார்த்தை ''மழைக்குருவி'' இதை நீங்கள் பிறந்ததில் இருந்து இந்த பாடல் வருதற்கு முன் எப்போதாவது கேட்டு இருக்கிறீர்களா? இல்லைதானே? அப்படித்தான் இந்த பாடலின் பின்னணியும். இதற்கு முன் கேட்காத ஒரு இசை. இந்த பாடல் முழுக்க ஒரு மரம் கொத்தி குருவியின் மரம் கொத்தும் சத்தம் ''மெட்டல் வர்ஷனில்'' இடம்பிடித்து இருக்கும். ரஹ்மான் குரலை சொல்லவில்லை, உண்மையாகவே ஒரு குருவி கொத்தும் சத்தம் இடம்பெற்று இருக்கும்.
இந்த பாடலில் வரும் பின்னணி இசையை ஏத்தி வரும் போதெல்லாம் ரஹ்மான் படத்தில் பயன்படுத்தி இருப்பார். கிச்சு கீச் என்றது.. கிட்டவா என்றது.. என்று உருகி மருகி ரஹ்மான் செல்ல இன்னொரு பக்கம் மெல்லிய வயலில் ஒன்று சிணுங்கி கொண்டு இருக்கும்.. இதையே கொஞ்சம் புல்லாங்குழலுடன் சேர்த்து ஏத்தியின் பின்னணி இசைக்கு பயன்படுத்தி உருக வைத்து இருப்பார்.
''உலகை உதறிவிட்டு சற்றே உயரே பறந்ததுவே'' என்று அந்த மழை குருவியை பற்றி வைரமுத்து எழுதிய வரி வரும். அந்த பாடலை கேட்பவர்களும் அப்படித்தான் உலகை உதறிவிட்டு சற்றே உயரே பறந்திருப்பார்கள். இந்த பாடலின் இசையை அப்படியே படத்தின் பின்னணி இசையாகவும் சிம்புவிற்கு பயன்படுத்தி இருப்பார். கொஞ்சம் ரொமான்டிக் தூக்கலாக.. சிம்புவாச்சே!
ரஹ்மானை சுற்றிய பூமி
உயரே பறந்தது போதும் கொஞ்சம் கீழே இறங்கி வா.. என்று இழுத்த பாட்டுதான் ''பூமி, பூமி.' படத்தின் மெயின் தீம் பாடல் என்று கூட இதை சொல்லலாம். இந்த பாட்டில் எது அழகு சக்தி ஸ்ரீ கோபாலனா, வைரமுத்தா, ரஹ்மானா, இல்லை அந்த கிட்டாரா.. எதுவென்று தனியாக பட்டிமன்றமே வைக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்த பாட்டு எலக்டிரிக் கிட்டாரை வைத்து வெளியே தூக்கி வீசும். இதயம் தாங்குமா? எங்கிருந்து எந்த கோரஸ் எப்போது வருகிறது, மனித கோரஸா, கருவியா என்று குழப்ப வைக்கும் ஒரு தினுசான மனசு இந்த பாடல்!
சிம்புவின் தீ
சிம்புவிற்கான இன்னொரு தீம்தான் இந்த கள்ள களவாணி. ஏத்திக்கு ''தீ'' போல ''தீம்'' மியூசிக் இருக்க வேண்டும் என்று ரஹ்மான் ஆடிய ''தீம் தீம்'' தான் இந்த பாடல். நீ வந்து சென்றனை என்ற வரியில் கொஞ்சம் கொஞ்சமாக தொடங்கும் இசை அழுத்தம் எகிறி எகிறி ''பிபி'' கூட்டி லேடி காஷின் ஜாலியான ''டொய்ன்ன்'' ரேப்பில் முடிகிறது. உயிர்ர்ர் வென்று சென்றனை...!
ஹயாத்தி
ஹயாத்தி.. இன்னும் சில மாதங்களுக்கு ஜென் இசட்களின் ரிங்டோன் இதுதான். அருண் விஜய்க்கு இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் இப்படி ஒரு தீம் அமைவது கடினம். இந்த பாடலுக்கு அரேபிய வரிகளை பாட மயாசா காரா என்று பாடகி வரவழைக்கப்பட்டார். ரேப் வர்ஷனை பாட ஷிவாங் வைஷ்னவ் வந்திருந்தார். இந்த வருடத்தின் விருதுகளை இப்போதே இவர்களுக்கு ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளலாம். அதெல்லாம் இருக்கட்டும் அதென்ன ஹயாத்தி மிஸ்டர்.ஷிவ்? (இதை வரும் வருடத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பெயராக வைக்கவும் வாய்ப்புள்ளது)
செவந்து போன நெஞ்சே எழு!
எல்லோருக்கும்.. எல்லோருக்கும் பிடித்த தீம் ஒன்றுதான் செவந்து போச்சு நெஞ்சே. 15 நிமிடத்திற்கு ஒருமுறை வந்து மிதக்க வைத்துவிட்டு செல்லும் செவந்து போச்சு நெஞ்சேதான் இந்த வருடத்தின் முக்கியமான பிஜிஎம்மாக இருக்க போகிறது. இந்த பிஜிம் முழுக்க பெண் ஒருவரின் புலம்பல் இருக்கும். கூர்ந்து கவனித்தால் பெண் ஒருவர் செல்லமாக சந்தோசத்தில் புலம்பிக் கொண்டே இருப்பது தெரியும். இந்த படத்தின் பாடலை எல்லாம் கேட்டுவிட்டு பாடும் போதே சந்தோசத்தில் துள்ளிக் குதித்து புலம்பி இருப்பாரோ என்னவோ?