சட்டசபை நிகழ்ச்சிகள் அரசு அதிகாரிகளுக்கு மட்டும் நேரடி ஒளிபரப்பா?... திமுக கடும் எதிர்ப்பு!
சென்னை: சட்டசபையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை அரசு அதிகாரிகளுக்கு மட்டும் நேரடி ஒளிபரப்பு செய்வதை கண்டித்தும், எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் இன்று அவையில் இருந்து ஒட்டு மொத்தமாக வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது மின்துறை மீதான கேள்விகள் எழுப்பப்பட்டது. அப்போது அதிமுக எம்.எல்.ஏ. ரங்கநாதன் பேசிக் கொண்டிருந்த போது, திமுகவின் சட்டசபை துணைத் தலைவர் துரைமுருகன் எழுந்து, துறை சார்ந்த விவாதம் நடக்கும் போது அந்த துறை அதிகாரிகள் சட்டசபையின் பார்வையாளர் மாடத்தில் இருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் மின்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என தெரிவித்தார்.
இதனை ஏற்று சபாநாயகர் தனபாலும் மின்துறை அதிகாரிகளை உடனடியாக அவைக்கு வருமாறு உத்தரவிட்டார். அதிகாரிகளும் வந்து அமர்ந்தனர். அப்போது மின்துறை விவாதத்தை திசை திருப்புவதற்காக திமுக உறுப்பினர்கள் தேவையற்ற பிரச்னைகளை எழுப்புவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகள் அவைக்கு வரவில்லையே தவிர, பக்கத்து அறையில் இருந்து இங்கு நடக்கும் விவாதங்களை நேரடியாக பார்க்க டிவியில் ஒளிபரப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது என்றார். அவை நடவடிக்கைகளை அவையை தவிர வேறு எங்கும் ஒளிபரப்பக் கூடாது என விதி இருக்கும் போது எப்படி அதிகாரிகளுக்கு ஒளிபரப்பலாம் என துரைமுருகன் கேட்டார்.
அப்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பேசினார், குறுக்கிட்ட சபாநாயகர் தனபால், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அது பற்றி பேசக் கூடாது என்று கூறி ஸ்டாலினின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக கூறினார்.
நான் நீதிமன்றத்தை விமர்சிக்கவோ, வழக்கு பற்றி கூறவோ இல்லை எதற்காக எனது பேச்சை நீக்குகிறீர்கள். எனது பேச்சை நீக்குவதாக இருந்தால் அமைச்சரின் பேச்சையும் அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டார். திமுகவினரும் அமளியில் ஈடுபட்டு, அவையிலிருந்து வெளியேறினர்.
வெளியே வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், சபாநாயகரின் தீர்ப்பை எதிர்க்கும் வகையில், அதனை சுட்டிக்காட்டும் வகையில் வெளிநடப்பு செய்துள்ளோம். தொடர்ந்து நடக்கும் செயல்பாடுகளில் நாங்கள் பங்கேற்போம் என கூறினார்.
சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் பார்க்கும் வகையில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என தாம் கோரியதாகவும், இதற்கு பதிலளித்த சபாநாயகர் நேரடி ஒளிபரப்பு தொடர்பான பிரச்சனை நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.
இதனையடுத்து அதிகாரிகளுக்கு மட்டும் தனி அறையில் நேரடி ஒளிபரப்பு செய்தது பற்றி கேள்வி எழுப்பியதாக கூறிய ஸ்டாலின், இதில் நீதிமன்றத்திற்கு குந்தகமாக தாம் ஏதும் பேசவில்லை என விளக்கினார். ராஜ்யசபா, லோக்சபா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. அதேபோல சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டு கொண்டேன்.
ராஜ்யசபாவில் பேசிய சசிகலா புஷ்பா முதல்வர் ஜெயலலிதா, தன்னை தாக்கியதாக கூறினார். அதை எல்லாம் மக்கள் நேரடியாக டிவியில் பார்த்தார்கள் அதேபோல சட்டசபை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்று கூறினார் ஸ்டாலின். தொடர்ந்து அவையில் நடந்தவற்றை விளக்கிய ஸ்டாலின், திமுக உறுப்பினர்களுடன் மீண்டும் அவைக்கு சென்றார்.