சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பலாமா? பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபையில்நடைபெறும் நிகழ்வுகள் நேரடியாக டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படாமல் தணிக்கை செய்யப்பட்ட வீடியோ படங்கள்தான் ஊடகங்களுக்கு வழங்கப்படுகிறது. எனவே, சட்டசபையில் என்ன நடக்கிறது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது என்றும், அப்படி தெரிந்தால்தான் தேர்தலின் போது யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் முடிவு செய்ய முடியும் என்றும் கூறி விஜயகாந்த் ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
மேலும், நாடாளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதுபோல, ஆந்திர பிரதேசம், மராட்டியம், பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே, தமிழக சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப தகுந்த நடவடிக்கையை எடுக்க தமிழக சட்டசபை செயலருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் விஜயகாந்த் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை ஏற்கனவே சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார் விஜயகாந்த், இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மீண்டும் ஐகோர்ட்டை நாடும்படி கூறியதை அடுத்து, விஜயகாந்த் மீண்டும் சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.