சமோசாவிற்குள் கிடந்த ஓணான்.. மயங்கி விழுந்த கஸ்டமர்.. விருதுநகர் டீக்கடையில் பரபரப்பு
விருதுநகர்: விருதுநகரில் டீக்கடை ஒன்றில் விற்பனை செய்த சமோசவிற்குள் ஓணான் இருந்ததால் தொழிலாளி மயக்கமடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரிலுள்ள ஒரு டீக்கடையில் ஜெயக்கனி என்பவர் சமோசா வாங்கி சாப்பிட்டுள்ளார். சமோசாவை பிய்த்த போது உள்ளே இறந்த நிலையில் ஓணான் இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அதிர்ச்சியாலோ அல்லது ஓணான் விஷத்தாலோ, ஜெயக்கனி மயங்கி சாய்ந்துவிட்டாராம். முதலுதவிக்கு பிறகு கண் விழித்த ஜெயக்கனி, நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் இதுகுறித்து புகார் அளித்தார்.
புகாரை அடுத்து விருதுநகர் டீக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த சமோசாக்கள் பறிமுதல் அனைத்தும் செய்யப்பட்டது. இதனால் நகரில் டீக்கடை வைத்துள்ள பல வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். ஆனியன் சமோசா எதிர்பார்த்தவருக்கு ஓணான் சமோசா கிடைத்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படித்தான், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தின் காஜியானா கிராமத்தில் மார்க்கெட் பகுதியில் விற்கப்பட்ட சமோசாவை ஹர்தீப் என்பவர் வாங்கி சாப்பிட்டார். அந்த சமோசாவிற்குள் பல்லி வால் இருப்பது தெரியவந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹர்தீப் சிங் கடைக்காரரை அடிக்க பாய்ந்து பெரும் தகராறு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.