தூத்துக்குடியில் பள்ளி வாகனத்தில் சிக்கி எல்.கே.ஜி மாணவி பலி – டிரைவர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பள்ளி வாகன சக்கரத்தில் சிக்கி எல்.கே.ஜி மாணவி பலியான சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திலேயே நடந்த இந்த கோர விபத்தினை அடுத்து பெற்றோர்கள் வாகனத்தின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் பெயர் நேகா, 4. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள மருதூர்கரையை சேர்ந்தவர் பட்டாணிசெல்வன் என்பவரின் மகளாவார். சிறுமி நேகா, உடன்குடி பரமன்குறிச்சி சாலையில் உள்ள சல்மா மெட்ரிக்குலேஷன் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். நேகா தினமும் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். அது போல் இன்று காலை வழக்கம் போல அவள் பேருந்தில் பள்ளிக்கு சென்றாள்.
மாணவி மரணம்
பள்ளி வளாகத்திற்குள் பேருந்து சென்றதும் மாணவ, மாணவிகள் அனைவரும் இறங்கி, தங்களது வகுப்பறைகளுக்கு சென்றனர். நேகா பேருந்தில் இருந்து இறங்கி பின்புறம் நின்று கொண்டிருந்தாள். அப்போது பேருந்து டிரைவர் பரமன்குறிச்சியை சேர்ந்த கர்ணன் என்பவர் திடீரென பேருந்தை பின்னோக்கி நகர்த்தினார். பின்னால் நேகா நிற்பதை கவனிக்காமல் அவர் பேருந்தை எடுத்தார். இதில் நேகா பேருந்தில் பின்புற சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தாள்.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் அறிந்ததும் குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கொதிப்பு
இதனிடையே பேருந்து சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவி பலியான சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் பள்ளிக்கு திரண்டு சென்றனர். பள்ளி வளாகத்திற்குள் புகுந்த அவர்கள் ஆத்திரத்தில் பேருந்தின் முன் பக்க, பின் பக்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கு நின்ற வேனின் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் பள்ளி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
யாருமே கவனிக்கலையே
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறும் போது, பள்ளி மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி சென்றதும், நேகா பின்புறத்தில் நின்றுள்ளாள். ஆனால் அவள் நிற்பதை பஸ் டிரைவர், நடத்துனர், பாதுகாவலர் யாரும் கவனிக்கவில்லை. அவர்களின் கவனக்குறைவு காரணமாகவே நேகா பேருந்து சக்கரத்தில் சிக்கி இறந்துள்ளாள். எனவே இதற்கு காரணமான டிரைவர், நடத்துனர், பாதுகாவலர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும் என்றனர்.
பதற்றம் பரபரப்பு
மேலும் பொதுமக்கள் பலர் தங்களது மோட்டார் சைக்கிள்களை சாலையில் நடுவே நிறுத்தி, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த உயர் போலீஸ் அதிகாரிகள் பெற்றோர்கள், உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
டிரைவர் கைது
போலீசாரின் பேச்சுவார்த்தையால், யாரும் சமாதானம் அடையவில்லை. பள்ளியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இதனிடையே பேருந்து டிரைவர் கர்ணனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.