உள்ளாட்சி தேர்தல் இப்போது கிடையாது.. தனி அதிகாரிகளின் பதவி காலம் நீட்டிப்பு.. திமுக, காங். எதிர்ப்பு
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சென்னை: 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களின் தேர்வு நடைபெற உள்ளதால் ஏப்ரலுக்கு பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பின்னர், அது ரத்து செய்யப்பட்டது. இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்பட வில்லை என்று திமுக சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்களின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் தேர்தல் நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது என்றும், வாக்குப்பதிவு அலுவலர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர் என்று அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் கூறியுள்ளார்.
இதனையடுத்து, உள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.