ஜூலைக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக சொன்னீர்களே? ஹைகோர்ட்டில் காரசார வாதம்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஹைகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் மீது ஜூலை 14ம் தேதி விசாரணை நடைபெற உள்ளது
சென்னை : உள்ளாட்சித் தேர்தலில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூலை 14ம் தேதி விசாரணைக்கு எடுத்தக் கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான இடஒதுக்கீட்டு முறையில் குளறுபடிகள் இருப்பதாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருபாகரன் உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதித்தார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் நூட்டிராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட அமர்வு, மே 14 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது.
சமூக ஆர்வலர் வழக்கு
இந்நிலையில், இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள அனுமதி கோரி மாற்றம் இந்தியா அமைப்பின் பாடம் நாராயணன் ஒரு இணைப்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி புதிய பிரதிநிதிகள் பொறுப்பேற்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை நீட்டிக்கக் கூடாது என்றும் அவர் தன்னுடைய மனுவில் கூறியிருந்தார்.
நீதிமன்றத்தில் உறுதி
இதனிடையே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத மாநிலத்தேர்தல் ஆணையம் மீது திமுக அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ஜூலை மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பிராமணப் பத்திரமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
திமுக வாதம்
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்குகள் இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக தரப்பு வழக்கறிஞர் ஜூலை மாதத்திற்குள் தேர்தல் நடத்துவதாக கூறிவிட்டு தற்போது அதற்கான எந்த நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தார். எனவே மாநில தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக சம்மன் அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ஜூலை 14ல் விசாரணை
இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு வக்கீல், வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே தனி அலுவலரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.