காது குடையும் குச்சியில் அடையாள மை... ஊரக உள்ளாட்சித் தேர்தல் சுவாரஸ்யங்கள்
சென்னை: ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டமாக நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில் பல்வேறு சுவராஸ்யமான நிகழ்வுகள் பல இடங்களில் அரங்கேறியுள்ளன.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்த சிலுவம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு சுண்ணாம்பு பூசப்பட்டு புதுக் கட்டிடம் போல் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது.
கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்களித்த வாக்குச்சாவடியில் காதுகுடையும் குச்சியில் அடையாள மை வைக்கப்பட்டதை கண்ட அவர் அதனை தூக்கி எறிந்தார்.
தமிழக பாஜக தலைவர் யார்.. 7ம் தேதி அறிவிப்பு.. யாருக்கு அதிக வாய்ப்பு
முதற்கட்டம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமையன்று 45,336 பதவிகளுக்கு நடைபெற்றது. 27 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 76% வாக்குப்பதிவு நடைபெற்றிருந்தது. இதனிடையே நாளை இரண்டாம் கட்டம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
சுண்ணாம்பு பூச்சு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்தக் கிராமமான சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார். அவர் வாக்களிக்க வந்த அரசு தொடக்கப்பள்ளி கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூசப்பட்டு, வளாகத்தில் கோலமிடப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டது. மேலும், மை வைப்பதற்காக முதல்வர் விரலை வைத்த இடத்தில் பட்டுப் போர்வைகள் போடப்பட்டிருந்தன.
தூக்கி எறிந்தார்
இந்நிலையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் ஆண்டாங்கோயிலில் தனது வாக்கை செலுத்துவதற்காக சென்ற போது காது குடையும் குச்சியில் அடையாள மை வைக்கப்படுவதை பார்த்தார். தனக்கு அந்த காது குடையும் குச்சியில் ஆசிரியர்கள் மை வைக்க முயன்ற போது, அந்தக் குச்சியை தூக்கி எறிந்து இதை பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.
ஆசிரியர்கள்
இதனிடையே பல இடங்களில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை கிராமமக்கள் தாங்களாக முன் வந்து செய்துகொடுத்தனர். கிராமமக்களின் அன்பில் நனைந்து தேர்தல் பணியில் இருந்த ஆசிரியர்கள் பூரித்து விட்டனர்.