உள்ளாட்சித் தேர்தல்: வேட்புமனு தாக்கல் முடிந்தது- இன்று பரிசீலனை
சென்னை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று மாலை 5 மணிவரை ஏராளமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அக்டோபர் 4ம் தேதியன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருப்பவர்களின் 5 ஆண்டுகள் பதவிக்காலம், வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனிடையே, தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்கள் வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சிகளில் 12 ஆயிரத்து 820 பதவிகள், ஊரக உள்ளாட்சிகளில் உள்ள ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 974 பதவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 794 பதவியிடங்கள் இத்தேர்தல் மூலம் நிரப்பப்பட உள்ளன. 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு உறுப்பினர், 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஆயிரத்து 471 ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சி தலைவர், 99 ஆயிரத்து 324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 12 மாநகராட்சிகளில் 919 வார்டு உறுப்பினர், 124 நகராட்சிகளில் 3 ஆயிரத்து 613 வார்டு உறுப்பினர், 528 பேரூராட்சிகளில் 8 ஆயிரத்து 288 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் அடங்கும்.
மாநில தேர்தல் ஆணையம்
ஊரக உள்ளாட்சிகளில் கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படை இல்லாமலும் மற்ற பதவிகளுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடக்கும். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்புகளை கடந்த மாதம் 25ம் தேதி மாநில தேர்தல் ஆணையர் பெ.சீத்தாராமன் வெளியிட்டார். அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 26ம் தேதி தொடங்கியது.
வேட்புமனு தாக்கல்
முதல் நாளில் 4 ஆயிரத்து 748 பேரும், 2-ம் நாளில், 6 ஆயிரத்து 433 பேர், 3ம் நாளில் 22 ஆயிரத்து 469 பேர், 5ம் நாளில் அதிகபட்சமாக 1 லட்சத்து 65 ஆயிரத்து 644 பேர், 6ம் நாளான சனிக்கிழமையன்று 21 ஆயிரத்து 18 பேர் என இதுவரை மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 352 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
வேட்புமனு தாக்கல் நிறைவு
காந்தி ஜெயந்தி விடுமுறை என்பதால் ஞாயிறன்று வேட்பு மனு தாக்கல் நடக்கவில்லை. நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவை வேட்பாளர்களை அறிவித்து மனு தாக்கலை முடித்துவிட்டன. விசிகா, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பிற கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் இறுதிநாளான நேற்று அதிக அளவில் மனுக்களை தாக்கல் செய்தனர். சுயேட்சை வேட்பாளர்களும் இறுதிநாளில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
வாக்குப்பதிவு
மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 4ம் தேதியான இன்று நடக்கிறது. போட்டியிட விரும்பாதவர்கள், வேட்பு மனுக்களை வாபஸ் அக்டோபர் 6ம் தேதியாகும். முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 17ம் தேதி, தேர்தல் இரண்டாம் கட்டம் அக்டோபர் 19ம் தேதி, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 21ம் தேதிகளில் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.