உள்ளாட்சி தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன? ஐகோர்ட் சரமாரிக் கேள்வி
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னென்ன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் அக்டோபார் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தன.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி , உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட விதம் தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்துக்கு எதிராக உள்ளது. சட்டவிதிகளை அப்பட்டமாக மீறி தேர்தல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்கிறேன். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், பஞ்சாயத்து சட்டவிதிகளை பின்பற்றி தேர்தல் அறிவிப்பாணையை புதிதாக வெளியிடவேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதன்பின், உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்த உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
இதனையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உள்ளாட்சித் தேர்தல் குறித்து என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அப்படி இல்லை என்றால் ஏன் இன்னும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
அதற்கு தாங்கள் கேட்ட எதையும் மாநில அரசு செய்து தரவில்லை என தேர்தல் ஆணையம் புகார் தெரிவித்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இல்லாவிட்டால் அந்த அமைப்புக்கு அர்த்தம் இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கும் வரும் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.