ஆகஸ்ட் 2... உங்க மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறையான்னு தெரியுமா?
சென்னை: ஆகஸ்ட் 2ம் தேதி வெகு விசேஷமான நாளாக இந்த ஆண்டு அமைந்துள்ளது. இந்த நாளில் பல மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் 2ம் தேதியன்று ஆடி அமாவாசையாகும். அதே நாளில்தான் ஆடிப் பெருக்கு வருகிறது. மேலும் குருப் பெயர்ச்சியும் அன்றுதான் வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறைகளை மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து வருகின்றனர்.
எந்தெந்த மாவட்டங்களில்
இந்த நிலையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறைகளை மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து வருகின்றனர்.
புனித நீராடுவர்
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்கள் பலர் கடலில் புனித நீராடுவார்கள் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதபுரீஸ்வரர் கோவில்
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி லட்ச தீப திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இதையொட்டி, குறிப்பிட்ட நாளில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் கெஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலாக, ஆகஸ்ட் 13ம் தேதியன்று கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் செயல்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சிறப்பு ஏற்பாடுகள் - பாதுகாப்பு
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யவும் தமிழகத்தின் அனைத்துக் கோயில்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பும், கண்காணிப்பு பணிகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டாள் கோவில் தேரோட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் ஆடிப் பெருக்கை முன்னிட்டு ஆகஸ்ட் 2 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆகஸ்ட் 5 ம் தேதி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
வல்வில் ஓரி விழா
கொல்லிமலையில் நடைபெறவுள்ள வல்வில் ஓரி விழாவினை முன்னிட்டு ஆகஸ்ட் 2ம் தேதியன்று நாமக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் சங்க காலத்தில் புகழ் பெற்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவராகத் திகழ்ந்த வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத் தன்மையினையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டு ஆடி மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் அரசு சார்பில் வல்வில் ஓரி விழா சுற்றுலா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
2 நாட்கள்
அதன்படி வரும் ஆகஸ்ட், 1 (திங்கட்கிழமை), ஆகஸ்ட் 2 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தினங்களில் அரசின் சார்பாக வல்வில் ஓரி விழா கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவின் போது அரசின் பல துறைகளை ஒருங்கிணைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இவ்விழாவிற்காக நாமக்கல் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் ஆகஸ்ட் 2ம் தேதியன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மத்திய அரசு அலுவலகங்களுக்குப் பொருந்தாது
இவ்விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் 6ம் தேதியன்று (சனிக்கிழமை) இம்மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பணி நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் உள்ளூர் விடுமுறையான 2ம் தேதியன்று அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், நாமக்கல் மாவட்டத்தில் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். மத்திய அரசு அலுவலகங்களுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.