காவிரி: மத்திய அரசு அலுவலகங்களுக்கு 4-ம்தேதி பூட்டு போடும் போராட்டம்-தமிழர் தேசிய கட்சி
காவிரி விவகாரம் தொடர்பாக வருகிற 4-ம் தேதி பூட்டு போடும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: காவிரி மேலாண் வாரியம் அமைப்பது தொடர்பாக வருகிற 4- ம் தேதி நல்ல ஒரு முடிவு கிடைக்காவிட்டால், தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த இருப்பதாகவும் தமிழக தேசிய கட்சி அறிவித்துள்ளது.
கோவையில் தமிழக தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு அக்கட்சியின் மாநில தலைவர் சத்தியமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கியுள்ளதாகவும் விவசாயிகளின் நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
வருகிற நான்காம் தேதி உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண் வாரியம் அமைப்பது தொடர்பாக நல்ல ஒரு முடிவு கிடைக்கும் என தான் நம்புவதாகவும் இல்லையெனில் தமிழகம் முழுவதுமுள்ள மத்திய அரசு அலுவலகங்களை பூட்டு போடும் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை என்ற மத்திய அரசின் சட்டத்தை வரவேற்பதாகவும் அதே வேளையில் 12 வயதுக்குட்பட்டோருக்கு என்பதை மாற்றி பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை என அறிவிக்க வேண்டும் என்றும் சத்தியமூர்த்தி வலியுறுத்தினார்.