நீலாங்கரை காவல்நிலைய விசாரணை கைதி மர்ம மரணம்: அடித்து கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு!
நீலாங்கரை காவல்நிலைய விசாரணையில் இருந்த கைதி மர்ம மரணம் அடைந்துள்ளார்.
சென்னை: நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணையில் இருந்த கைதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மேலும் கைதியை போலீசார் அடித்து கொன்றுவிட்டதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளதால், இது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் விசாரணையும் கோரப்பட்டுள்ளது.
செம்மஞ்சேரியை சேர்ந்தவர் அந்தோணி 22, என்பவர் மீது திருட்டு, கொள்ளை உட்பட பல குற்ற வழக்குகள் உள்ளன. இதனால் இவரை வீட்டில் பெற்றோர் சேர்த்து கொள்வதில்லை. எனவே, திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணின் வீட்டிலேயே அந்தோணி இருந்து வருகிறார்.
இந்தநிலையில் மீண்டும் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். திருடிய நகைகளை எங்கே வைத்துள்ளாய், தங்களுடன் வந்து எடுத்து கொடுக்குமாறு கூறி, அவரை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது வழியில், திடீரென அந்தோணிக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறியதையடுத்து போலீசார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்தோணி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தகவலறிந்து வந்த உறவினர்கள் அந்தோணி இறப்பில் மர்மம் உள்ளதாகவும், போலீசார் விசாரணையின்போது தாக்கியதால்தான் அந்தோணி இறந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து அந்தோணி மரணம் தொடர்பாக மாஜிஸ்ட்டிரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் விசாரணையில்தான் அந்தோணி எவ்வாறு இறந்தார் என தெரிய வரும் என்றும் அதன்பேரில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.